திரஸ்கரணம் எனில் மறைத்தல், பிறர் மனதை அறிதல் என்று பொருள். இந்த திரஸ்கரணீ தேவி பண்டாசுர வதத்தின் போது எதிரிகளின் மனக்குறிப்பை அறிந்து செயல்பட்டவள் என லலிதோபாக்யானம் கூறுகிறது. வாராஹி தேவியின் உபாங்க தேவதையாக இந்த திரஸ்கரணி தேவி போற்றப்படுகிறாள். இந்த திரஸ்கரணி தேவியை திருவாரூர் தியாகராஜ மூர்த்தியைச் சுற்றி இள நிற ரோஸ் வண்ண திரைவடிவில் தரிசிக்கலாம். தியாகராஜப் பெருமானின் ரகசியங்களை திரை வடிவில் காக்கும் தேவி. இந்த அம்பிகையின் தியான ஸ்லோகத்தில் நான்கு நிற குதிரைகள் இழுக்கும் கரு நிற ரதத்தில் திகம்பரியாய் கைகளில் வில் அம்பு ஏந்தி மணிபூரக சக்கரமாகிய வயிற்றில் ஐம் எனும் வாக்பவ பீஜம் துலங்க தந்து பார்வையை புருவ மத்தியில் இருத்தி அலையும் கேச பாரத்தோடு துலங்குபவள் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு மகிமைமிக்க திரஸ்கரணி தேவியை இந்த நவராத்திரி தினங்களில் நெஞ்சில் நினைந்து தியானிப்போம். ஆரூரில் சென்று தரிசிப்போம்.
ந.பரணிகுமார்