×

மனபயம் போக்குவார் மலையாளத்து மகாராஜா

நடராஜபுரம், கோவில்பட்டி  

தூத்துக்குடி மாவட்டம், திருமங்கை நகர் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட கோவில்பட்டி மாநகரில் ரயில்நிலையம் அருகில் அமைந்துள்ளது மலையாளத்து மகாராஜா கோயில்.1987ஆம் ஆண்டு ஸ்ரீ ராமானுஜம் என்பவர் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை என்ற ஊரில் கோவில் பூஜை திருப்பணி முடித்து ஊருக்கு திரும்பும் வேளையில் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ஓடைப்பாலம் பக்கத்தில் வருகின்ற போது ஏதோ ஒரு சக்தி அவரை கீழே உருட்டி தள்ளியது. அந்த நேரம் வானத்தில் இடியோசையுடன் ஒரு அசரிரீ கேட்டது. என் பேரு சுடலை, நான் கொட்டாரக்கரையில் இருந்து வந்துள்ளேன் எனக்கு நிலையம் அமைத்து பூஜை செய்து வந்தால் உன்னையும் உன் வழி வாரிசுகளையும், என்னை நம்பி கைதொழும் பக்தர்களையும் வாழ்வாங்கு வாழ வைப்பேன். என்றது அந்த அசிரீரி. அதன்படி எட்டாத பீடம் அமைத்து கோயில் எழுப்பினார் ராமானுஜம். மலையாளத்து மகாராஜா சுடலைமாட சுவாமி என அழைத்து வழிபட்டு வந்தார்.

பேச்சி அம்மனுக்கும் அருகில் சிலையிட்டு வணங்கி வந்தனர்.மகாராஜா அருளால் இந்த தலத்தில் எத்தனையோ அற்புதங்கள் நடந்தேறி உள்ளன. நோய் தாக்குதலுக்கும், பேய் தாக்குதலுக்கும் ஆளான ஆயிரக்கணக்கான பேர்கள், இந்த தலத்திற்கு வந்து நன்மை அடைந்து உள்ளார்கள். இத்தலத்தில் சுயம்புவாக லிங்க வடிவில் அய்யனார் தோன்றினார். இதனால் சுயம்புலிங்க அய்யனார் என்ற நாமத்தோடு அருள்புரிகிறார். ஸ்ரீ சிவசக்தி பத்ரகாளி அம்மன் மற்றும் சுயம்புலிங்க அய்யனாருக்கு குதிரை வாகனத்தோடு உருவம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.தினசரி காலையும் மாலையும் பூஜை நடைபெற்று வரும் இந்த தலத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் நண்பகல் 12 மணியளவில் அருள் வாக்கு சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் யாக சாலை பூஜையும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், பக்தர்களுக்கு பரிகார நிவர்த்தியும் செய்யப்படுகிறது.

பௌர்ணமி தினத்தில் யாக பூஜையும் ஸ்ரீசிவசக்தி பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜையும், பக்தர்களுக்கு பரிகார நிவர்த்தியும். தமிழ்மாத கடைசி வெள்ளி தினத்தில் ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜாவிற்கு மாதாந்திர சாமக் கொடையும், பக்தர்களுக்கு பரிகார நிவர்த்தியும், இரவு வேளையில் அன்னதானமும் நடைபெறுகிறது.ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தில் வெங்கல அக்னி சட்டியுடன் முளைப்பாரி ஊர்வலமும், இரவில் மகுடம், வில்லிசை, படைப்பு பூஜை, திரளைபூஜை மற்றும் பூக்குழி நடைபெறுகிறது.திருக்கோவிலில் சுயம்பு லிங்க அய்யனார், கற்பக விநாயகர், வெளிகண்ட சாமி, சிவசக்தி பத்ரகாளியம்மன்,  பூமாரி அம்மன், கருமாரி அம்மன், சடா முனீஸ்வரர், ருத்ர சண்டி காளி, மலையாளத்து சுடலை மகாராஜா, பேச்சி அம்மன், முண்டன் சாமி, பாண்டி முனீஸ்வரர், துர்க்கை அம்மன், நாக தேவதை, கொம்புமாடன், கொம்பு மாடத்தி, பதினெட்டாம்படி கருப்பசாமி, பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

கோயில் தொடர்புக்கு மாரிராஜ்
(செல் : 9486716599).
- அ. தெய்வநாயகம்

Tags : Maharaja ,
× RELATED ஆனந்த வாழ்வருளும் ஆறுவிரல் பாத தரிசனம்