×

முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய கொங்கராயகுறிச்சியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படுமா?

தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்புசெய்துங்கநல்லூர் : முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய ஆதிச்சநல்லூர் போன்று கொங்கராயகுறிச்சியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படுமா? என்று தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தாமிரபரணியின் நதிக்கரையில் அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சியில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. மண்ணில் புதைந்து தற்போது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் 11ம் நூற்றாண்டில் ஜடவர்மன் வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது. தென் சீர்காழி என்றும், சிவன் சட்டநாதர் என்றழைக்கப்படும் பைரவர் மிகவும் பழமையானாவர். இந்த கோயில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகிறது. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோயில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோயிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி காட்சியளிக்கிறது. வீரபாண்டீஸ்வரர் கோயிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோயில்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த கோயில்களை வெளியே கொண்டு வர தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் விக்னேஷ் கூறுகையில், ‘எங்கள் ஊரில் பல கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து உள்ளது. கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9ம் நூற்றாண்டுடன் நிறைவு அடையவில்லை. உலக நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைந்து முடிவுரை இல்லாத வரலாற்றில் பயணிக்க தொடங்கியுள்ளது. இதற்கான சான்றுகளை 1899 முதல் 1905ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.அதன்படி, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும் அலெக்ஸாண்டர் இரியா கூறியுள்ளார். இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை மண்ணுக்குள் புதைந்து காணப்படும் வலம்புரி விநாயகர் கோயில் 10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது.கொங்கராயகுறிச்சியில் இருந்த பூர்வகுடிகளே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது. மேலும், கொங்கராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகிறது. இப்படி பல சான்றுகள் ஆதிச்சநல்லூர், கொங்கராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைந்த முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.  தற்போது ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளும் மத்திய தொல்லியல் துறையினரும்,  தாமிரபரணி கரையில் உள்ள அகழாய்வு இடங்களை தேடி ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறையினரும் கொங்கராயகுறிச்சியில் அகழாய்வு மேற்கொண்டு, இங்குள்ள பழமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவே உள்ளது….

The post முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய கொங்கராயகுறிச்சியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kongarayakurichi ,Ganganallur ,Konkaraikurichchi ,Adichanallur ,
× RELATED மாநில நீச்சல் போட்டிக்கு கொங்கராயக்குறிச்சி பள்ளி மாணவர் தேர்வு