×

வேண்டியதை அருள்வார் வேளிமலை முருகன்

குமாரகோவில், தக்கலை, கன்னியாகுமரி

நாகர்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குமாரகோவில் என்கிற வேளிமலை. இங்கு சுமார் எட்டு அடி உயரத்தில் மணமகனாக முருகன் நிற்க, அருகில் சுமார் ஆறரை அடி உயரத்தில் வள்ளி மணமகளாக இருந்து அருளுகிறார். திருமால் சிவதவமுனியாக இருக்கும்போது திருமகள் மான் வடிவு கொண்டு அங்கு வந்து நின்றாள். கருவுற்ற மான், வள்ளிக்கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் அழகிய பெண் குழந்தையை ஈன்றது.  வள்ளிக்கிழங்கு செடியில் குழந்தை கிடந்ததை கண்டெடுத்த அப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் நம்பிராஜன், அக்குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். வள்ளி தக்க பருவம் வந்ததும் வேடுவர் குல வழக்கப்படி வள்ளி தினைப்புனம் காத்து நின்றாள். இந்த செய்தியை நாரதர், முருகனிடம் கூற, முருகனும் தினைப்புனம் நோக்கி சென்றார்.

வேடனாக, வேங்கை மரமாக, விருத்தனாக உருமாறி வந்த முருகன் வள்ளியுடன் ஊடல் பல புரிந்தார். இதை பார்த்து வள்ளி வெகுண்டு நிற்கும்போது  தனது அண்ணனான விநாயக பெருமான் துணையோடு வள்ளியை காந்தரூப முறைப்படி திருமணம் செய்வதற்காக முருகன், தனது சுய உருவை காட்டினார். வள்ளியும் தனது பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினாள், முருகன் வள்ளியை மணமுடித்துக்கொண்டார். முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்த இடம் என்பதால், இந்த தலம் வேள்விமலை என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த வார்த்தை மருவி வேளி மலையாக மாறிவிட்டதுமுருகப் பெருமானுக்கும், வள்ளிக்கும் இங்குதான் திருமணம் நடந்ததாகக்கூறப்படுகிறது.

முருகனுக்கும் வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்ததால் ‘வேள்வி நடந்த மலை’ ‘வேளிமலை’ ஆகியது என கூறப்படுகிறது. மலையாளத்தில் ‘வேளி’ என்ற சொல் ‘திருமணம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில், நம்பூதிரி இனத்தவர் திருமணத்தை ‘வேளி’ என்றே குறிப்பிடுகின்றனர். வள்ளியை முருகன் காதலித்து மணம் செய்துகொண்டதால் இம்மலையைத் திருமண மலை என்ற பொருளில் ‘வேளிமலை’ என வழங்குகிறார்கள்.
தலவிருட்சமான வேங்கை மரத்துக்கெனத் தனி சந்நதி அமைந்துள்ள தலம் இதுவாகும். முருகன் வள்ளியை மணம்புரியவிருந்த நேரத்தில் வள்ளியின் உறவினர் தினைப்புனம் நோக்கித் திரண்டுவர, வேங்கை மரமாக முருகப் பெருமான் மாறினார். புதியதாக ஒரு மரம் நிற்கவே அதனை அவரது உறவினர் வெட்டி விட்டனர் என்று சொல்லப்படுகிறது. வேங்கை மரத்தின் எஞ்சிய பகுதிக்கு வஸ்திரம் சார்த்தி தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தக்  கோயிலில் தட்சனுக்கு தனி சந்நதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன்  யாகம் செய்தான்.

அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து  ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த  சந்நதியில் காட்சி தருகிறார். ஆட்டுத்தலையுடன் காட்சி தரும் தட்சனுக்கு இங்கு தனியாக கோயிலின் மேற்கு வாசல் அருகில் சந்நதி அமைந்துள்ளது.இக்கோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் வள்ளிக்குகை உள்ளது. அருகிலேயே விநாயகருக்கு ஒரு சிறுகோயில் உள்ளது. வள்ளிக் குகை அருகிலேயே தினைப்புனம், வள்ளிசோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை என்றழைக்கப்படும் இடங்கள் அமைந்து உள்ளன. வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளி சிற்பங்கள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் முதல் கந்த சஷ்டி விரதத்துக்குக் காப்புக் கட்டி ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை, கார்த்திகை கடைசி வெள்ளிக் காவடி, மார்கழி சுசீந்திரம் தேரோட்டத்தையொட்டி மக்கள் மார்சந்திப்புக்கு முருகன் செல்லுதல், தைப்பூசம் திருக்கல்யாண கால் நாட்டும், பங்குனி அனுஷ நட்சத்திரத்தில் இரவு திருக்கல்யாணமும் நடைபெறும். இந்தத் திருக்கல்யாணத்துக்கு முன்பு நடைபெறும் குறவர் படுகளம் தனிச்சிறப்புடையதாகும். பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் ‘வள்ளி கல்யாணம்’ நடைபெறும். அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6.30க்கு முருகப்பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கும். இரண்டாவது நாள் காலை 5.30க்கு முருகப்பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்வார். பிற்பகல் முருகன், வள்ளியைப் பல்லக்கில் அழைத்து வருவார்கள். அதைக் காணும் குறவர்கள், முருகனையும்வள்ளியையும் தடுத்து நிறுத்திப்போர் புரிவார்கள்.

குறவர் படுகளம் எனும் இந்நிகழ்ச்சி மலைப்பாதை வழிநெடுகிலும் நிகழ்த்தப்படுகிறது. இறுதியில் கோயிலின் பின்புற வாசலில் குறவர்கள் முருகப் பெருமானிடம் தோல்வியடைந்து சரணடைவார்கள்.  இந்நிகழ்ச்சியில் மலைப் பகுதியில் வாழும் குறவர் இனத்தவர்களே கலந்துகொள்கிறார்கள். அதன் பின் முருகனும் வள்ளியும் கோயிலுக்கு செல்வார்கள். தொடர்ந்து இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடக்கும். அப்போது தேன், தினைமாவு. அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். இரவு சுவாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லாக்கு வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள். தீபாராதனைக்குப்பின் கல்யாண மண்டபம், கோயிலைச் சுற்றியுள்ள சத்திரங்கள், மலைப்பாதைகள் எனப்பல இடங்களிலும் அன்னதானம், கஞ்சி தர்மம் நடக்கும்.

அறுபடை வீடுகளில் இடம்பெறாமல், முருகப் பெருமானின் திருமண வைபோகத்தில் இடம்பிடித்து முருக பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது வேளிமலைதிருக்கோயில் தோன்றி காலம் உத்தேசம் 2000 - ம் ஆண்டுகள் இருக்கும் என்று எண்ணப்படுகிறது. இங்கு தோன்றி இருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் ( உருவச் சிலை) உயரம் 8 அடி 6 அங்குலம். முருகப் பெருமானின் இடப்பக்கம் வள்ளியம்மையின் உருவச்சிலை 6 அடி 8 அங்குலத்தில் உள்ளது.உட்புறப் பிராகாரத்தில் வலம்வரும்போது தென்மேற்கு மூலையில் வள்ளி, தெய்வானையுடனும் விநாயகர் சாஸ்தாவுடனும் வேலவர் இளைய நாயனாராக இருந்து அருளுகிறார். மேற்குப் பிராகாரத்தில் காசி விசுவநாதர் காட்சியளிக்கிறார். வடமேற்கில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் மணவிடைக் குமாரர் சந்நதி அமைந்துள்ளது. இவரே நவராத்திரியின்போது திருவனந்தபுரத்துக்கும், மார்கழித் திருவிழாவின்போது சுசீந்திரத்துக்கும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்பவர்.

வடக்குப் பிராகாரத்தின் இறுதியில் வள்ளி தெய்வானை சமேதராக ஷண்முகராக ஆறுமுக நயினார் விளங்குகிறார். ஆறுமுக நயினாரும் நடராஜரும் அடுத்தடுத்து தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர்.தேவஸ்தானத்தின் பக்கத்தில் வேளி மலை என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மலை ஒன்று உள்ளது. அதில் வள்ளி நாயகியின் குடும்ப பாரம்பரியம் உள்ள வேடுவர் இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வள்ளி நாயகி காத்த தினை புனம் ( வள்ளிச் சோலை, வட்டச் சோலை) முதலியவையும் முருகப் பெருமான் கிழவனாக காட்சியளித்த கிழவன் சோலையும் முருகப் பெருமானும், வள்ளியும் குளித்த குளம் (சுனை) அடங்கியதும் முருகப் பெருமானுக்கு திருமணம் நடத்தி வைத்த கணபதி கல்யாண விநாயகராகவும் வீற்றிருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

இத்திருக்கோயிலில் இது போன்ற வைபவம் நடைபெறுவதால் அதற்கு உரிய அத்தாட்சி (கல்வெட்டுக்கள்) இருப்பதாலும் இதை திருவேரகம் என்று அழைக்கின்றனர்.இப்பேர் பெற்ற இடமாகிய வேளிமலை முருகப் பெருமான் வீற்றிருக்கும் குமாரகோயில் திருவேரகம் என்று அழைக்கப்பட்டு முருகப் பெருமான் அருள் பாலித்து வரும் இடம் வேளிமலைக் குமாரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் நாகர்கோவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கை சோலை சூழ இவ்வூர் காணப்படுகிறது. மலைமேல் கோயில்
அமைந்துள்ளது.

- ச. சுடலை ரத்தினம்
படங்கள்: ஆர்.மணிகண்டன்

Tags : Velimalai Murugan ,
× RELATED சுசீந்திரம் மக்கள்மார்...