- அமைச்சர்
- கே ஷெக்கர்பாபு
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- திரு.
- மு.கே ஸ்டாலின்
- விழுப்புரம் மாவட்டம்
- மரக்கனம் அருள்மிகு கிரிஜாம்பல் உதனுராய் பூமிஸ்வரர்
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, (14.07.2022) விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருள்மிகு கிரிஜாம்பாள் உடனுறை பூமீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தாவது, திருக்கோயில்களில் புனரமைப்பு, குடமுழுக்கு, பழைய திருத்தேர்களை புதுப்பித்தல், புதிய திருத்தேர்களை தேவையான திருக்கோயில்களுக்கு ஏற்படுத்தி தருதல், திருக்குளங்களை புனரமைத்தல், நந்தவனங்கள் உருவாக்குதல், முடி கொட்டகைகளை நவீனமயமாக்குதல், திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, 1000 ஆண்டுகளுக்கு மேலான திருக்கோயில்களை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன. இத்திருக்கோயிலில் ரூ.80 லட்சம் செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெறவுள்ள பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. புதிதாக ரூ.85 லட்சம் செலவில் திருத்தேர் அமைக்கின்ற பணியும், திருக்குளம் ரூ.80 லட்சம் செலவில் புனரமைக்கின்ற பணியும், இத்திருக்கோயிலில் குடமுழுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இதை விரைவுப்படுத்தி 6 மாத காலத்திற்குள் திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்படும். மீண்டும் இராஜகோபுரம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வாய்ப்பிருப்பின் ராஜகோபுரம் கட்டப்படும். விழுப்புரம் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில், மரக்காணம் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில், மயிலம், அருள்மிகு சிவஞான பாலயசுவாமி திருமடம் (முருகன் திருக்கோயில்), திருவக்கரை, அருள்மிகு சந்திரமெளலீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம் அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் ஏற்கனவே நடந்துக் கொண்டிருக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும், பக்தர்கள் தேவையான வசதிகளை செய்து தரவும் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். திருக்கோயிலுக்கு வருகின்ற வாடகை, வருமானம், நிலுவையில் உள்ள வழக்குகள், ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களை மீட்பது தொடர்பாக அனைத்து ஆய்வுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்கிறோம். காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் மத்தியில் விரிசல் ஏற்பட்டு இரண்டு பிளவாக இருந்தது. அந்த பணிகளை நிறைவு செய்ய இருக்கிறோம். பன்நெடுங்காலமாக திறக்கப்படாமல் இருந்த ஆயிரம் கால் மண்டபத்தை இந்த ஆட்சி பெறுப்பேற்ற பிறகு தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு சென்றபின் ஆயிரம் கால் மண்டபத்தை நேரடிடையாக ஆய்வு செய்து அதன் வாயில் கதவை திறக்க உத்தரவிட்டோம். இப்படி பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் வேளையில் வருவாயை செம்மைப்படுத்தி, முறைப்படுத்துவதோடு, நிலுவையில் இருக்கும் வழக்குகளை துரிதப்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாகதான் ரூ. 3000 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளோம். கடந்த மாதம் வரை திருக்கோயில்களில் நிலுவையில் இருந்த வாடகை தொகை சுமார் ரூ.200 கோடி வசூலிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வணிக ரீதியான நிலங்கள் 1000 ஏக்கர் மீட்கப்பட்டதோடு, நிலுவையில் உள்ள வாடகையும் வசூலிக்கப்பட்டதால், திருக்கோயில் திருப்பணிகளுக்கு பயன்படுத்த ஏதுவாக உள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு கூட இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் வராத நாளே இல்லை. அதேபோல் நீதிமன்ற உத்தரவுகள் பத்திரிக்கையில் வராத நாளே இல்லை. விழுப்புரம் அருள்மிகு கைலாசநாதர் கோயில் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதற்குண்டான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன் இ.ஆ.ப., விழுப்புரம் இணை ஆணையர் திரு. சிவக்குமார், திருக்கோயில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். …
The post திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ. 3000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு : அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.