×

கூடலூரில் கன மழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்.! 2 பேர் உயிர் தப்பினர்

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கூடலூரில் பெய்த மழையால் பாண்டியாறு, மாயாறு மற்றும் அனைத்து கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இங்குள்ள மங்குழி பாலத்தில் இதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (55) மற்றும் மணி ஆகியோர் நடந்து சென்றனர். வெள்ளப்பெருக்கால் பாலம் இடிந்து விழுந்தது. வெள்ளத்தில் 2 பேரும் சிக்கினர். ஒரு வழியாக மணி என்பவர் தப்பி கரைக்கு திரும்பினார். மாணிக்கம் உடைந்த பாலத்தை பிடித்தபடி போராடினார். அந்த பகுதி மக்கள் போராடி மாணிக்கத்தை பத்திரமாக மீட்டனர். ஊட்டியில் நேற்று சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்த நிலையில், அரசு மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்களின் மீது தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், கார்கள் நொறுங்கின. காரில் அமர்ந்திருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூர் பகுதியில் கனமழை நேற்று பெய்த நிலையில், மாயாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெப்பக்காடு பகுதியில் மாயாறு குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவ்வழித்தடத்தில் சென்ற உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை ஊட்டி – கூடலூர் சாலையில் எச்பிஎப் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று கார் மீது விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் குளிச்சோலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுவதால், ஏராளமான கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மழை மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது….

The post கூடலூரில் கன மழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்.! 2 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kudalur ,Nilgiri ,Pandiyaru ,Mayaru ,Bridge ,
× RELATED மானியம் குறித்து தகவல் கேட்டதால்...