×

திருப்பணிக்காக காத்திருக்கும் விண்ணகர பெருமாள் திருத்தலம்

ஆரூர் - செய்யாறு

வேலூர் மாவட்டம் செய்யாறு அருகேயுள்ளது ஆரூர். இவ்வூரின் மையத்தில் சிதிலமடைந்த நிலையில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இப்பெருமாளுக்கு ஐந்ஜத்ர விண்ணகர பெருமாள் என்று பெயர். இப்பெருமாள் கோயிலின் கருவறை முதல் முன்மண்டபம் வரை 17 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் இந்திய தொல்லியல் துறையினரால் 1994/95 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கி.பி, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். சோழ அரசன் பராந்தகன் முதல் ராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் வரையிலான மன்னர்களின் காலத்து கல்வெட்டுகள். இக்கல்வெட்டு களில் இவ்வூரை ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தனையூர்,  நாட்டு  திருப்பாச்சூர்புரம் என்றும் திருப்பாசூர்புறம் அகத்து ஆரூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூரில் ஒரு சபை இருந்ததாகவும் இச்சபை ஊர் நிர்வாகத்தையும் கோயில் நிர்வாகத்தையும் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வூர் சபையின் கீழ் பல வாரியங்கள் செயல்பட்டது தொடர்பான தகவல்களும் உள்ளன. திருப்பாச்சூர்புரத்தைச் சேர்ந்த ஆளங்குநாட்டார் என்ற அமைப்பு கோயிலுக்கு நிலம் அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணகர எம்பெருமான் கோயிலுக்கு பானைகளை வழங்கிய குயவருக்கும் கோயிலில் நடமாடும் மங்கைக்கும் நெல் பரிசாக அளித்ததற்கான தகவலும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.வேதம் கற்றுத் தரும் பள்ளிக்கு கிடைப்புறம் என்ற பெயரில் நிலதானம் செய்யப்பட்டது என்றும் இந்நிலதானம் அளித்தவர் சேரமான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் சேமானேரி என்ற ஏரி இருப்பது பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. இவ்வூரில் வேதபாராயனம் செய்யவும் ஒப்புவித்தல் செய்பவர்களுக்கு தங்கத்தை தானமாக வழங்கும் சம்வத்சர வாரியம் பற்றியும் உத்திராடத்து நாளன்று மந்திர தந்திரங்கள் ஒப்புவித்தல் பணியும் நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறது.
    
பங்கல நாட்டின் தலைவனான கண்ணாறக்குறி மகன் மாதேவன் என்பவர் 700 கடி நெல் கோயிலுக்கு வழங்கிய செய்தியும், கோயிலில் தினமும் நெய்விளக்கு எரிக்க புண்டராஜமங்கலத்தைச் சேர்ந்த பொய்யார் காளி கானாதன் என்பவர் பொன்தானம் செய்த செய்தியும், நெல் காடி என்றுஅளவையில் அளக்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.கோயிலின் கருவறையில் ஐந்ஜத்ர விண்ணகர பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவ்வளவு சிறப்பாக இருந்த கோயில் தற்போது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஊர் மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் விரும்புகின்றனர். கைங்கர்யம் செய்ய விரும்புபவர்கள் பொருளாகவோ, நிதியாக செய்ய விரும்பலாம். தொடர்புக்கு: காந்தி.9842288231,சம்பத்.8122693122,வேணுகோபால்.7845301070.இக்கோயில் வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் மாம்பாக்கம் அருகில் ஆரணி செய்யார் நெடுஞ்சாலையில் செய்யாறிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலிருக்கும் ஆரூரில் அமைந்துள்ளது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?