- ஆம்னி பேருந்து
- அஇஅதிமுக பொதுக் கூட்டம்
- மதுராந்தகம்
- அஇஅதிமுக
- பொதுக்குழு
- ஆம்னி
- அதிமுக பொதுக்குழு
- தின மலர்
மதுராந்தகம்: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் வந்த வேன் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ் கொடுங்காளூர் அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 13 பேர் வேன் ஒன்றில் நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த வேதபுரி (45) ஓட்டினார். நேற்று காலை சுமார் 6 மணி அளவில் புறப்பட்ட வேன், 7 மணி அளவில் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை எனும் பகுதியில் வந்து கொண்டிருந்தது.அதேவேளையில், சென்னை – திருச்சி மார்க்கமாக லாரி ஒன்று எதிர் திசையில் பொருட்கள் எதுவும் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சென்னையை சேர்ந்த ஜான்பால் (40) ஓட்டி வந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் மையப் பகுதி தடுப்பு சுவரில் மோதி எதிர்திசையில் சென்றது. அப்போது, அவ்வழியாக பாளையங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்றின் மீது லேசாக உரசியபடியே சென்று, அதன் பின்னால் வந்த அதிமுக பொது குழு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.இதில், வேனில் பயணம் செய்த உளுந்தை கிராமத்தை சேர்ந்த பரசுராமன் (65), அண்ணாமலை (45) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். வேன் ஓட்டுநர் வேதபுரி மற்றும் அதில் பயணம் செய்த ராமச்சந்திரன் (55), ரவி (40), துரை (42), ரங்கராஜ் (45), சுரேஷ் (38), சரவணன் (40) உள்ளிட்ட 11 பேரை அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், லாரி டிரைவர் ஜான்பால் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பலியானவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது….
The post ஆம்னி பஸ், வேன் மீது லாரி மோதல்; அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த 2 பேர் பலி: 13 பேர் படுகாயம் appeared first on Dinakaran.