கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பள்ளியில் இருந்து பைக்கில் வந்த தந்தையை சரமாரியாக தாக்கி அவரது மகளை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி நடந்துள்ளது. இதை கண்டித்து மக்கள் மறியல் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வார்டுகளில் சுமார் 20,000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக 14வது வார்டுக்கு உட்பட்ட மேட்டு காலனி பகுதியில் ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மேட்டு காலனி இருந்து ஏனாதிமேல்பாக்கம் செல்லும் சாலையில் அதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து கஞ்சா புகைத்துக்கொண்டு சாலைகளில் செல்லும் பெண்கள் மற்றும் பொது மக்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மேட்டு காலனி சாலையில் சென்ற லாரியை வழி மடக்கி கண்ணாடியை உடைத்து 2000 ரூபாயை பறித்துள்ளனர். இதுசம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மேட்டு காலனியை சேர்ந்த ஆனந்த் (29) என்பவர் குருவாடிச்சேரி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் இருந்து தனது 3 குழந்தைகளை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் 3 பேர், கஞ்சா போதையுடன் அவரை வழிமடக்கியதுடன் ஆனந்தை சரமாரியாக தாக்கி பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல், ஆனந்தை அடித்து உதைத்து அங்குள்ள பாலத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தைகள் கதறியதால் மேட்டு காலனி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் போதை கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இதன்பிறகு பொதுமக்கள் திரண்டுவந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இந்த பிரச்னைக்கு காரணமான கஞ்சா வாலிபர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து கஞ்சா விற்பனையாளர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது….
The post பள்ளியில் இருந்து பைக்கில் வந்தபோது தந்தையை சரமாரியாக அடித்து உதைத்து மாணவியை கடத்தி பலாத்கார முயற்சி; கும்மிடிப்பூண்டி அருகே மறியல் appeared first on Dinakaran.