×

குரு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீக்கும் வழிபாடு முறைகள்

குழந்தைகளை விரும்பாத மனிதர்கள் அனேகமாக எவரும் இல்லை எனக்கூறலாம். திருமணம் முடிந்த பலருக்கும் குழந்தை பேறு கிடைப்பதற்கு இறைவனின் அருளும், அந்த இறைவனின் பிரதிநிதிகளாக இருக்கும் நவகிரகங்களின் நல்லாசிகளையும் வேண்டும். இந்த நவகிரகங்களில் ஒரு மனிதருக்கு புத்திரப் பேறு அளிக்கும் சக்தி வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கிறார். சிலருக்கு ஜாதகத்தில் இந்த குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. குருபகவானால் ஏற்படும் இந்த புத்திர தோஷத்தை போக்குவதற்கான எளிய பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பாரேயானால் அந்த ஜாதகருக்கு குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட நபர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முற்பிறவியில் மற்றவர்களின் குழந்தைகளை கொடுமை செய்தது, அவர்களை கொத்தடிமை போல் வேலை வாங்கியது போன்ற காரணங்களால் அக்குழந்தைகளின் சாபம் பெற்று, இப்பிறவியில் குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் சென்ற பிறவியில் தன் கணவரின் உடன் பிறந்த சகோதரர்களின் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதால், அக்குழந்தைகளின் சாபத்தைப் பெற்று இப்பிறவியில் புத்திர தோஷம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து குரு பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.

வெள்ளை கொண்டை கடலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்பது மஞ்சள் துணியில், துணிக்கு 3 கொண்டை கடலைகளை போட்டு ஒன்பது கடலை முடிப்புகளை முடிந்து கொண்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும். பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, குரு பகவானை மனதில் நினைத்து குரு பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.  இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும்.

பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கொண்டை கடலைகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு குரு கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக குரு பகவான் அருள் புரிவார்.

Tags : removal ,infant ,Guru Bhagavan ,
× RELATED மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!