×

மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முன்னாள் பஞ்., தலைவியிடம் கத்திமுனையில் நகை கொள்ளை-முகமூடி கும்பல் கைவரிசை

மேட்டூர் : மேட்டூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் கத்திமுனையில் நகை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளி குட்டப்பட்டிபுதூர் நான்குரோடு பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி(80). எம்.காளிப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர். இவரது கணவர் முத்துக்கவுண்டர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ருக்மணி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம், காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில், அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் வீட்டினுள் புகுந்தனர். முகமூடி அணிந்த இருவர், ருக்மணியை தட்டி எழுப்பியுள்ளனர். இதனால், திடுக்கிட்டு விழித்த அவரை, கத்தியை காட்டி மிரட்டி வாயை கையால் பொத்திக்கொண்டு கழுத்தை நெரித்துள்ளனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக கூறி, காதில் அணிந்திருந்த இரண்டு பவுன் தோடுகளை பறித்துக் கொண்டனர். பின்னர், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் இரட்டைவட சங்கிலி, 3 பவுன் சங்கிலியை எடுத்துக் கொண்டனர். மேலும், காலில் அணிந்திருந்த வெள்ளி காப்புகள், கைகளில் அணிந்திருந்த பித்தளை வளையல்களையும் பறித்துக் கொண்டனர். மூக்குத்தியை கழற்ற முடியாததால் அப்படியே விட்டு விட்டனர். குரல்வளை நசுக்கப்பட்டதால் ருக்குமணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பரிதாபப்பட்ட முகமூடி கொள்ளையர்கள், அவருக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.இதையடுத்து, நால்வரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினர். இதையடுத்து, தட்டு தடுமாறி அப்பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்ற ருக்மணி, கதவை தட்டி விபரத்தை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நங்கவள்ளி காவல்நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் மற்றும் ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்ப நாய் லில்லி துப்பு துலக்க விடப்பட்டது. அங்கிருந்த தடயங்களை தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன்(பொ) வழக்குப்பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார். …

The post மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முன்னாள் பஞ்., தலைவியிடம் கத்திமுனையில் நகை கொள்ளை-முகமூடி கும்பல் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Panj ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி