×

ஆயுள் தரும் எமனேஸ்வரம் சிவன்

ராமநாதபுரத்தில்  இருந்து 37 கிமீ தொலைவில் எமனேஸ்வரம் உள்ளது. இங்கு பழமையான  எமனேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. மூலவராக எமனேஸ்வரமுடையார் என்று  அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சொர்ணகுஜாம்பிகை தாயார் தனி  சன்னதியில் அருள் பாலிக்கிறார். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத  சுப்பிரமணியர், மல்லிகார்ஜூனேஸ்வரர் மற்றும் பைரவர் சிலைகள் உள்ளன. தல  மரமாக வில்வ மரம் உள்ளது. கோயில் அருகே எமதீர்த்தம் உள்ளது.

தல வரலாறு

பண்டை  காலத்தில், சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிரிழக்கும்படி வரம்  பெற்றிருந்தார். இறுதி காலத்தில் அவரது உயிரை பறிக்க எமதர்மர்  பூலோகத்திற்கு வந்தார். இதனையறிந்த மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு  யாத்திரை சென்றார். திருக்கடையூர் வந்த போது, மார்க்கண்டேயர்  மீது எமதர்மர் பாசக்கயிறை வீசினார்.இதனையடுத்து, அங்கிருந்த  சிவலிங்கத்தை மார்க்கண்டேயர் இறுக தழுவிக் கொண்டார். இதனால் பாசக்கயிறு  தவறுதலாக சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான், தனது  பணியை சரியாக செய்யாத எமதர்மரை காலால் எட்டி உதைத்தார். இதில் எமதர்மர்  பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் வந்து விழுந்தார்.

தவறை உணர்ந்த  எமதர்மர், தான் விழுந்த பகுதியில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்னர்  தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை  வேண்டி வழிபட்டார். இதனை கண்டு  மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவரது வேண்டுதலுக்கு இணங்க  அப்பகுதியில் எழுந்தருளினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு  கோயில் எழுப்பப்பட்டு, எமனேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது என்பது  புராணம்.

*********
மார்கழி திருவாதிரை, நவராத்திரி, கந்தசஷ்டி,  திருக்கார்த்திகை, மாசிமகம், சிவராத்திரி உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். மாசி மகத்தன்று சிவபெருமானின் அம்சமான, முருகப்பெருமான் இங்குள்ள எம  தீர்த்தத்தில் எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள்கிழமையில் முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். சிவபெருமான் இந்த  தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ்  காட்சி தருகிறார். இழந்த பதவி மற்றும் செல்வத்தை மீட்க எமனேஸ்வரமுடையாரை  பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர். ஆயுள் விருத்தி பெறவும், சனி தோஷம்  நீங்கவும் மூலவரிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது  மற்றும் எண்பதாம் திருமணங்கள் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது  பக்தர்களின் நம்பிக்கை.

திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள்  சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து  வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.  மார்கழியில் பைரவாஷ்டமி, புரட்டாசியில் துர்க்காஷ்டமியன்று பைரவருக்கு  விசேஷ ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. நோய் நீங்க பக்தர்கள் பைரவரை  வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், பைரவருக்கு ருத்ரஹோமம் மற்றும்  விசேஷ பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை  தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30  மணி வரையிலும் திறந்திருக்கிறது.


Tags : Shiva ,
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்