உடுமலை: உடுமலை அடுத்த போடிப்பட்டியில் பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. போடிபட்டியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான பாலதண்டாயுதபாணி கோயில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. கடந்த 18ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான சாந்திஹோமம் மற்றும் திசாஹோம பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து யாக சாலை அலங்காரம் நடந்தது. கும்ப அலங்காரம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, முருகப்பெருமானுக்கு முதல் கால வேள்வி நடந்தது. இரண்டாம் கால யாக வேள்வி, விமான கலச ஸ்தாபனமும், மூன்றாம் கால யாக வேள்வியும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தன. நேற்று காலை நான்காம் கால யாக வேள்வி, கலசங்களை கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. இதைத்தொடர்ந்து, பால தண்டாயுதபாணி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.