×

சப்தஸ்தான விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோயில் சுவாமி ஏழூர் புறப்பாடு

திருவையாறு: சப்தஸ்தான விழாவையொட்டி திருவையாறு ஐயாரப்பர் கோயில் சுவாமி ஏழூர் புறப்பட்டு சென்றது. இன்று பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி நடந்தது. கடந்த 14ம் தேதி மாலை சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது. கடந்த 18ம் தேதி கோயில் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று முக்கிய விழாவான சப்தஸ்தான பெருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் கண்ணாடி பல்லக்கிலும், சுயசுவாம்பிகையுடன் நந்திகேஸ்வரர் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டனர்.

இதை தொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய கோயில்களுக்கு சென்று 6 ஊர் சுவாமிகளை பல்லக்கில் அழைத்து கொண்டு செல்லும். நேற்றிரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது. இன்று 22ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

Tags : Swamy Ezhoor ,departure ,Thiruvaiyaru Eeyarappar ,
× RELATED மாண்டஸ் புயலால் 2வது நாளாக விமான சேவை...