கூடுவாஞ்சேரி: மழை பெய்வதற்குள் பள்ளமாக உள்ள விளையாட்டு திடலை மண் கொட்டி சமன்படுத்தி தரவேண்டும் என கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால், விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு, விநாயகபுரம் பகுதியில் மலையை ஒட்டி உள்ள விளையாட்டு திடல் 5 அடி மேடும் பள்ளமாக உள்ளது. இதற்கு காரணம், கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு மணல் கொள்ளையர்கள் அந்த பகுதியில் இரவு நேரங்களில் மண் எடுத்து விற்றுள்ளனர். கோடைக்காலங்களில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது வழக்கம். இந்நிலையில், மழைக்காலங்களில் இந்த விளையாட்டு திடல் முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும். இதில், விநாயகபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் விளையாட முடியாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திலிருந்து வரும் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அங்கு சென்று விளையாடுவதும், மீன் பிடிப்பதும், கல் எறிந்தும் வருகின்றனர். இதனால், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் அங்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, பள்ளமாக உள்ள விளையாட்டு திடலை சமன்படுத்தி சீரமைத்தி தரவேண்டும் என்று கீரப்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி மற்றும் மே மாதம் 31ம் தேதி வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில், நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து ஒன்றியக்குழு பெருந்தலைவரின் பொது நிதியிலிருந்து விளையாட்டு திடலை சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி ஒதுக்க முடிவு தான் செய்யப்பட்டது. ஆனால், விளையாட்டு திடலை சீரமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விநாயகபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் அந்த விளையாட்டு திடல் பள்ளமாக இருப்பதால், விளையாட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கோடை மழை பெய்யும் சூழல் உள்ளது. எனவே மழை பெய்வதற்கு முன் விளையாட்டு திடலை சீரமைத்தி தர வேண்டும் என வலியுறுத்தி கூறினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, மேற்படி பகுதியில் உள்ள விளையாட்டு திடலை சீரமைக்கும் பணியை தொடங்குவதற்கு, ஊராட்சியில் போதிய நிதி இல்லை, கலெக்டர் நிதி ஒதுக்கியதும் மேற்படி விளையாட்டு திடல் சீரமைக்கும் பணி விரைவில் நடைபெறும் என பதிலளித்தனர். …
The post காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் விநாயகபுரம் பகுதியில் மேடு, பள்ளமான விளையாட்டு திடல்; சீரமைக்க கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.