×

திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா தொடக்கம்

சிவகாசி: சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்.5ம் தேதி நடைபெறும் ஆறாம் திருவிழாவின்போது, காலையில் அம்பாள் வீதி உலா வந்து, தண்ணீர்பந்தல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். மறுநாள் 7ம் திருவிழாவின்போது, புஷ்ப பல்லக்கில் அம்பாள் சயன கோலத்தில் சீர்வரிசைகளுடன் வீதி உலாவும், பின்னர் அம்பாள் யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும்.

ஏப்.7ம் தேதி 8வது நாள் விழாவான பொங்கல் திருவிழாவாகும். அன்று காலையில் பக்தர்கள் கோயிலின் முன்பு பொங்கலிடுவார்கள். அன்று மாலை அம்பாள் குதிரை வாகனத்தில் முப்பிடாரியம்மன் கோயிலின் முன்பு வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். மறுநாள் கயிறு குத்து திருவிழாவாகும். அன்று பக்தர்கள் அலகு குத்தி, அக்கினி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மறுநாள் தேரோட்டம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதே போன்று திருத்தங்கல்லில் திருத்தங்கல் எட்டு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவும் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா ஏற்பாடுகளை தலைவர் பாலகுருநாயுடு, செயலாளர் கருப்பசாமி பொருளாளர் பூமிநாதன் உட்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Pongal Festival ,temple ,Thirupangal Mariamman ,
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா