×

தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை

எனக்கு வயது 52. நான் படும் அவமானங்களும், துயரமும் சொல்லி மாளாதது. திக்குவாய் பிரச்னையால் யாருடனும் சகஜமாக பேச முடியவில்லை. திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து ஆகி மறுமணமும் செய்து கொள்ளவில்லை. வாரிசும் இல்லை. என் வாழ்வில் அடுக்கடுக்காக பல துன்பங்கள் வருவதற்கு என்ன காரணம்? உரிய பரிகாரம் சொல்லுங்கள். ராமச்சந்திரன், கர்நாடகா.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ‘பதவீ பூர்வ புண்யானாம்’ என்று சொல்வார்கள். அதாவது நாம் வாழுகின்ற வாழ்க்கை என்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் அடிப்படையில் அமையும் என்பது இதன் பொருள். அவரவர் செய்த கர்மவினையினை அனுபவித்தே ஆக வேண்டும். அதை மாற்ற யாராலும் இயலாது. உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் பாவகத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரஹங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

அதோடு ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது தயக்கமான மனநிலையைத் தந்திருக்கிறார். ஆறாம் வீட்டில் சனியின் வக்ர சஞ்சாரமும், 12ல் சந்திரனின் அமர்வும் அடுக்கடுக்கான துன்பங்களைத் தந்து வருகிறது. உங்கள் தம்பியின் அகால மரணமும், தந்தை இறப்பதற்கு முன்பு புத்தி பேதலிப்புடன் இருந்ததும், உங்களது விரக்தியான மன நிலையும் பரம்பரையில் இருக்கும் பிரச்னைகளை தெளிவாக உணர்த்துகிறது. பகவானின் நாமத்தை உச்சரித்து வருவதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை. உங்கள் மனதிற்குப் பிடித்த குருவினைத் தேர்ந்தெடுங்கள். குருமகானின் ஆசிரமத்திற்குச் சென்று அவரது பாதத்தைச் சரணடையுங்கள். வாழ்வின் எஞ்சிய நாட்களை குருசேவையில் கழியுங்கள். பாவங்கள் விலகுவதோடு மனநிம்மதியும் காண்பீர்கள்.

நாங்கள் அண்ணன் தம்பிகள் ஆறு பேர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கிறோம். அனைவர் குடும்பமும் முன்னேற்றம் இன்றி தவிக்கிறோம். தந்தை வழியில் யாருக்கும் சொந்த வீடு இல்லை. ஆறு பிள்ளைகளைப் பெற்றும் 93வயது வரை வாழ்ந்த என் பெற்றோர் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. ஜோதிடத்தின் மீதும், கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. பிரச்னை தீர உரிய பரிகாரம் சொல்லுங்கள். தனபால், நாமக்கல்.

தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு தெய்வத்தையும், ஜோதிடத்தையும் குறை சொல்வதில் என்ன பயன்? ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று சொல்வார்கள். ஆறு பேர் அண்ணன் தம்பி இருந்தும் எல்லோரும் தனித்தனியாக வசிக்கிறீர்கள். காலமும், நம்முடைய வாழ்வியல் முறையும் மாறிவிட்டது. மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உண்மையில் உங்கள் ஜோதிடர் குறிப்பிட்ட சொந்த வீட்டிற்கான கால நேரம் என்பது ஜாதகக் கணக்கின்படி சரியானதே.

இருந்தாலும் அந்த முயற்சி தடைபட்டதற்கான காரணம் குடும்பத்தின் வாழ்வியல் நடைமுறையே ஆகும். முதலில் குலதெய்வ வழிபாட்டினைத் துவக்குங்கள். உங்கள் பூர்வீகத்தில் இருந்து தென்மேற்கு திசையில் வனம் சூழ்ந்த பகுதியில் பிரதி வருடந்தோறும் தவறாமல் தீமிதித் திருவிழா நடந்து வருகின்ற, தலையில் நாகத்துடன் அமர்ந்திருக்கும் பெண் தெய்வமே உங்களுடைய குலதெய்வம் என்பது ஜாதகத்தின் வாயிலாகத் தெரியவருகிறது. அண்ணன் தம்பி ஆறு பேரின் குடும்பமும் ஒன்றாக இணைந்து குலதெய்வ வழிபாட்டினை குறைவின்றி செய்யுங்கள். அடுத்த தலைமுறையினரின் மூலமாக உங்கள் சொந்த வீடு கனவு நனவாகும்.

27வது வயதில் இருக்கும் என் மகன் இரவில் உறங்கும்போது அதிகமாக பல்லைக் கடிக்கிறான். இதனால் மறுநாள் காலையில் தாடையில் வீக்கம் ஏற்படுகிறது. மருத்துவரிடம் காட்டி வைத்தியம் செய்து கொண்டுள்ளான். இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? லதா, டில்லி.
    
மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சூரியனும், புதனும் இணைந்திருப்பதால் வயிறு சார்ந்த உபாதைகளை சந்தித்து வருகிறார். வயிற்றில் இருக்கும் பிரச்னையே இரவு உறக்கத்தின்போது அவ்வாறு வெளிப்படுகிறது. அவருடைய கல்வி மற்றும் உத்யோகத்தின் காரணமாக அவர் பெரும்பாலான காலத்தை ஹாஸ்டலில் கழித்திருக்கிறார். வீட்டுச் சாப்பாடு இல்லாமல் போனதும் ஒருவகையில் அவரது பிரச்னைக்கான காரணமாக உள்ளது. தற்போது நடந்து வரும் சூரிய தடை முடிவடையும்போது அவருடைய பிரச்னையும் முற்றிலுமாக சரியாகிவிடும்.

அவருடைய திருமணத்திற்குப் பிறகு அவரோடு பெற்றோர் ஆகிய நீங்கள் சேர்ந்து வாழ முடியுமா என்று கேட்டிருக்கிறீர்கள். அவருடைய உத்யோக அமைப்பின் படி அவரால் உங்களுடன் சேர்ந்து வாழ இயலாது. ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே அவர் உங்களுடன் வந்து இணைய முடியும். நீங்கள் இந்த விஷயத்தை பெரிய பிரச்சினையாக எண்ணாமல் மகனின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் காலை மாலை இருவேளையும் உங்கள் மகனை சந்தியாவந்தனம் தவறாமல் செய்து வரச்சொல்லுங்கள். சந்தியா வந்தனத்தின் போது அவர் செய்யும் சூரிய நமஸ்காரம் ஒன்றே அவரது பிரச்னை தீர போதுமான வழியாகும். அவரது எதிர்கால வாழ்வு சிறப்பாக உள்ளதால் நீங்கள் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவரையொருவர் விரும்பும் என் பேரனுக்கும், பேத்திக்கும் திருமணம் செய்ய பொருத்தம் பார்த்ததில் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்று தெரிய வருகிறது. ஆரோகண அவரோகண ரஜ்ஜூவாகில் திருமணம் செய்யலாம் என்று ஒரு புத்தகத்தில் பார்த்தேன். இவர்களின் திருமணம் நடந்தேற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சுப்ரமணியன், திருநெல்வேலி.

நீங்கள் குறிப்பிடும் ரஜ்ஜூப் பொருத்தம் என்பது நட்சத்திரங்களின் அடிப்படையில் வைத்து கணக்கிடப்படும் பத்து பொருத்தங்களில் ஒன்றாகும். உண்மையில் திருமணத்திற்கான பொருத்தம் என்பது ஆண்  பெண் இருவரின் ஜாதகங்களின் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டுமே தவிர நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து கணக்கிடுவது தவறு. பின்பு இந்த முறையை ஏன் பின்பற்றுகிறார்கள் என்ற சந்தேகம் மனதில் தோன்றக்கூடும். பிறந்த நேரத்தினை துல்லியமாக தெரிந்து கொள்ள இயலாத அந்த காலத்தில் சாதாரண மனிதர்கள் யாருக்கும் ஜனன ஜாதகம் என்பது எழுதப்படவில்லை. அவ்வாறு ஜாதகம் எழுதாத நிலையில் அவரவர் பெயரின் முதல் எழுத்தினைக் கொண்டு பெயர்பொருத்தம் பார்த்தார்கள்.

அவ்வாறு பெயர்பொருத்தம் பார்ப்பதற்காக கண்டறியப்பட்ட ஒரு முறையே இந்த பத்து பொருத்தங்கள். இந்த காலத்தில் இருவருக்கும் ஜனன ஜாதகம் இருக்கின்ற சூழலில் அந்த பத்து பொருத்தத்தினைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாதக ரீதியாக பொருத்தம் பார்த்து திருமணத்தை முடிவு செய்யுங்கள். உங்கள் பேரனும் பேத்தியும் ஒருவரையொருவர் விரும்பும் பட்சத்தில் மனப்பொருத்தம் என்பது நன்றாக உள்ளதால் வேறு பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்தை பெருமாள் கோயிலில் வைத்து நடத்துங்கள். அவர்களது வாழ்வு சிறப்பாக அமையும்.

நான் 38 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் தேசத்தை பாதுகாக்கும் பணியில் சேவை செய்துவிட்டு தற்போது ஓய்வூதியம் பெற்று வருகிறேன். எனது விருப்பம் எஞ்சிய வாழ்விற்குள் ஒரு கார் வாங்க வேண்டும் என்பதே. எனது விருப்பம் நிறைவேறுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? பாலுசாமி, சென்னை.

74வது வயதில் மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிறந்த தேதியும், எழுதியிருக்கும் கிழமையும் வெவ்வேறாக உள்ளது. அதோடு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜென்ம நட்சத்திரத்திற்கும் அந்த நாளிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உங்களுடைய பிறந்த தேதி மற்றும் நேரத்தினை சரியாக தெரிவித்தால் தான் ஜாதகத்தை கணித்து துல்லியமாக பலன் சொல்ல இயலும். நாட்டிற்காக 38 ஆண்டுகள் சேவை செய்திருக்கும் உங்களது அடிமனதில் இருக்கும் ஆசையை நிறைவேற்றும் வகையில் பிரஸ்னம் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் கணித்துப் பார்த்த போது உங்களுடைய கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. நீங்கள் புதிதாக கார் வாங்குவதை விட செகண்ட் ஹேண்ட் முறையில் ஒரு கார் வாங்க முடியும்.

அதற்கான கால நேரம் வருகின்ற வைகாசி மாதத்தில் வருகிறது. ஜூன் மாதம் 1ம் தேதிக்கு மேல் 15ம் தேதிக்குள் ஒரு செகண்ட் ஹேண்ட் காரினை வாங்கிவிடுவீர்கள். சாம்பல் நிறத்தினை உடையதாக அமையும். காரை வாங்கியவுடன் வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னதாக முருகப்பெருமான் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அர்ச்சகரின் துணையுடன் பூஜை செய்து கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் அருகில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆறுமுகனின் அருளால் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்.

நான் ஒருவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். வயது குறைவாக உள்ள காரணத்தினால் என் அம்மா அவரிடமிருந்து என்னை பிரித்துவிட்டார். என் கணவர் கூலித்தொழிலாளி என்பதால் என் வீட்டில் எதிர்க்கிறார்கள். அவர் வீட்டில் ஜாதியை காரணம் காட்டுகிறார்கள். நாங்கள் சேர்ந்துவாழ பரிகாரம் கூறுங்கள். பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

17வது வயதில் நீங்கள் செய்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பது மட்டுமல்ல, இந்த வயதில் உங்களுடைய முடிவும் சரியானதாக இருக்காது. 12ம் வகுப்பு வரை உங்களை ஆங்கில வழியில் படிக்க வைத்த பெற்றோரின் மனநிலையை எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு காதல் என்ற பெயரில் ஒரு காலக்கொடுமையானது உங்கள் கண்ணை மறைத்திருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நான்கு கிரஹங்களின் இணைவும், ஜென்ம லக்னத்தில் ராகுவின் அமர்வும் உங்களை தவறான பாதையில் தள்ளி இருக்கிறது.

என்றாலும் லக்னத்தில் இணைந்திருக்கும் குரு பகவான் உங்களை காப்பாற்றி உள்ளார். நடந்தவற்றை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள். மேற்கொண்டு உங்கள் உயர்கல்வியில் கவனத்தை செலுத்துங்கள். நன்றாகப் படித்து சொந்தமாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் சொந்தக்காலில் தான் நிற்க வேண்டும். கணவனை மட்டும் நம்பி உங்கள் வாழ்க்கையை நடத்த இயலாது. களத்ர தோஷம் என்பது இருப்பதால் இளம் வயதில் செய்யும் திருமணத்தால் பலனும் இல்லை. 27வது வயதில் உங்கள் திருமண வாழ்க்கை என்பது மலரும். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பதை நினைவில் கொண்டு பெற்றெடுத்த அன்னையை வணங்கி வாருங்கள். நலமுடன் வாழ்வீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்