கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், மதியம் 2.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரடி வீதியில் தொடங்கிய தேரோட்டம் கிரிவலம் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.