×

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா

சென்னை: சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்றிரவு வெள்ளி ரிஷப வாகன வீதியுலா நடந்தது. 12ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 13ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 14ம் தேதி தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 15ம் தேதி சவுடல் விமானமும், 16ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடந்தது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூவர் நாயன்மார்களோடு காட்சி அளிக்கிறார். தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும் கி.பி. 400-ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் ‘நாயன்மார்கள்’ என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் ‘சைவ சமயக் குரவர்கள்’ என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால், இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவிலில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு தீபாராதனை நடைபெறும். நாயன்மார்கள் பல்லக்குக்கு முன்பாக மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளுவர். பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்து அடையும். அப்போது, பெண்கள் பலர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்குவர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும்.

Tags : festivals ,Mylapore Kapaleeshwarar ,
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்