கோவை: கோவை தண்டுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலின் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடந்து முடிந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் விக்னேஸ்வர பூஜை, தீபாராதணை நடந்தது. இந்நிலையில், நேற்று காலை 6.45 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கவுமார மடலாயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன், அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜாமணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தண்டுமாரியம்மன் மூலாலயம் மற்றும் பரிவார சமகால மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும், மகா அன்னதானமும் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஏராமளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்று முதல் மண்டல பூஜை துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாதன், துணை கமிஷனர் மேனகா செய்திருந்தினர். கும்பாபிஷேகம் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.