×

தெய்வம் உனக்குள்ளே இருக்கிறது

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 4

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் கம்பன் விழாவில் ஒரு விவாத அரங்கம். கம்பனில் மிகுந்து காணப்படுவது கவிதை அழகா கருத்துச் செறிவா என்பது தலைப்பு. தற்போது மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் கருத்துச் செறிவு தான் மிகுந்து இருக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாக கம்பன் முதல் பாடலாகிய உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் எனும் பாடலை குறிப்பிட்டு இதில் கவிதை நயம் எங்கே இருக்கிறது தத்துவம் தானே இருக்கிறது என்று கேட்டார். பின்னர் நான் பேசும்போது இந்தப் பாடலுக்கு உலகம் அனைத்தையும் கடவுள் உருவாக்கினார் என்று பொருள் கொண்டால் கவிதை நயம் இல்லைதான் ஆனால் உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் என்ற சொற்றொடருக்கு உலகமெங்கும் தான் இருக்குமாறு ஆக்கினார் என்று பொருள் கொண்டால் அது கவிதை நயம் வெளிப்பாடு என்று வாதிட்டேன் பின்னர் உபநிடதங்களில் அப்படி ஒரு கருத்து இருப்பதை அறிந்து கொண்டேன் மனிதன் தன்னைப்பற்றி நம்பிக்கையோடு திகழ்வதற்கான எத்தனையோ காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்று தனக்குள் இருக்கும் தெய்வாம்சம் தான். அனைத்தையும் படைக்கிற பொறுப்பு நான்முகனுக்கு இருக்கிறது. அந்த நான்முகன் கூட தன்னுடைய படைப்பாற்றல் மூலப் பரம்பொருள் அருளால் தனக்கு தரப்பட்டது என்பதை உணர்கிறார் உணர்த்துகிறார்.

நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்.”  

என்கிறார் இந்த ஆழமான உண்மையை ஒரு திரைப்படப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் அனாயசமாக எழுதியிருப்பார் கர்ணன் படத்தில் தன்னுடைய பிறப்பின் ரகசியம் தெரியாமல் கர்ணன் கலங்குகிற போது அவன் மனைவி ஆறுதல் சொல்வதாக அந்த பாடல் கண்ணுக்கு குலம் ஏது என்று தொடங்கும். அந்தப் பாடலின் சரணத்தில்

‘‘பாலிலிருந்தே நெய் பிறக்கும்  கண்ணா
பரம்பொருள் அறிந்தே  உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் இதில்
 மேல் என்றும் கீழ் என்றும் எங்கிருக்கும்”

என்று கவிஞர் எழுதியிருப்பார் பாலிலிருந்தே நெய் பிறக்கும்  பரம்பொருள் அறிந்தே  உயிர் பிறக்கும் என்பது பரமாத்மாவின்  அங்கங்களே நாம் என்பதை அழகுபடச் சொல்கிறது.“விறகில் தீயினன்; பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்” என்கிறார் திருநாவுக்கரசர். விறகு நெருப்பு படுவதால் மட்டுமே பற்றிக் கொள்வதில்லை. அதற்குள் ஏற்கெனவே நெருப்பின் தன்மை இருக்கிறது. எனவே பற்றிக் கொள்கிறது. அது போல் மனிதனுக்குள் இறைத்தன்மை இருக்கிறது. அதனை உணர்வதாலேயே அவனால் செயற்கரிய செயல்களை செய்ய முடிகிறது. மனிதன் தன் கனவுகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை நிகழ்த்தும் ஆற்றல் தனக்குள் இருப்பதை முதலில் நம்ப வேண்டும். சமூகவியல் கல்வியின் தந்தை என கருதப்படும் அகஸ்தே காம்தே மனிதன் ஒரு சமூக மிருகம் என்கிறார் சமூக மிருகம் என்ற சொல் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை பெரிதாக கருதுகிற மனப்பான்மை கொண்டிருக்கும் மனிதன் தனக்கென்று மட்டும் வாழாமல் தான் வாழ்கின்ற சமூகத்தில் சூழலையும் சிந்தித்து அதற்கு உகந்தவனாக தன்னை ஆக்கிக் கொள்கிறான் என்பதை குறிக்கிறது.

மனிதன் தன்னை சற்றே மேம்பட்ட மிருகமாகக் கருதுவது மேற்கத்திய சிந்தனை. ஆனால் தன்னை தெய்வாம்சம் கொண்டவனாக உணர்வதுதான் மனித சமூகத்திற்கு கீழைத்தேயங்களின் ஆன்மிக மரபு கொடுத்திருக்கும் கொடை.  விலங்குநிலை மனித நிலை தெய்வநிலை ஆகியவற்றை நாம் பகுத்துணர அளவுகோல்களாக இருப்பவை சில குண இயல்புகள். நன்கு பழகிய மனிதர்களையே விலங்குகள் சில நேரங்களில் தாக்கி விடுகின்றன என்று நாம் பார்க்கிறோம் இதற்கு காரணம் விலங்குகள் பெரும்பாலும் உந்துதல் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. சமூக மனிதன் பெரும்பாலும் உள்ளுணர்வு என்பதன் அடிப்படையில் இயங்குகிறான் அவனே தெய்வீக நிலைக்கு வளர வேண்டும் என்றால் தனக்குள்  ஆழமான விழிப்புணர்வை வளர்த்துக் கொள்கிறான். சொல்லப்போனால் மனிதனுக்குள்ளே இந்த மூன்று தன்மைகளுமே மனிதனுக்குள் இருப்பவைதான். அவனுடைய வாழ்க்கை முறைக்கேற்பவும் பக்குவத்துக்கு ஏற்பவும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவும் சிற்சில தன்மைகள் ஆளுமையோடு விளங்கும்.

எடுத்துக்காட்டாக மனிதன் போதைப் பொருட்களுக்கு ஆட்படுகிற நேரத்தில் அவன் எவ்வளவுதான் அறிவாளியாக கல்விமானாக இருந்தாலும் கூட விலங்கு நிலையில் செயல்பட்டு தகாத செயல்களை செய்கிறான். தெளிந்தபின் வருந்துகிறான் இது வெறும் உந்துதலின் அடிப்படையில் அவன் செயல்பட்டதன் அடையாளமாகும். அதேநேரம் எல்லாவற்றையும் மிகுந்த கவனத்தோடும் தீவிரத்தோடும் செய்கிற இயல்புடைய மனிதன் தன் உள்ளுணர்வோடு தொடர்புடையவன் ஆகின்றான். சில நேரங்களில் ஒன்றைச் செய்ய தொடங்கும்போதே ஏதோ ஒன்று தனக்குள்ளேயே வழிகாட்டுவதை உணர்கிறான். தான் செய்வது சரியா தவறா  என்கிற  கேள்விகளுக்கு  உள்ளிருந்தே பதில்கள் கிடைப்பதைப் பார்க்கிறான். இது உள்ளுணர்வு சரியாக இயங்கத் தொடங்குவதன் அடையாளம்
ஞானிகள் தங்கள் உள்நிலை  விழிப்புணர்வின் காரணமாக சராசரி மனிதர்களுக்கு புலப்படாத அம்சங்களையும் நுட்பங்களையும் உணர்ந்து அதற்கு தேவையானவற்றை முன்கூட்டியே செய்கிறார்கள்.  இது எல்லையில்லாத விழிப்புணர்வின் வெளிப்பாடு.

நம் வாழ்வை நாம் திரும்பிப் பார்த்தால்  எந்த செயல்களையெல்லாம் செய்ததற்காக வருந்துகிறோம் என சிந்திக்கும் போது பெரும்பாலும் வெறும் உந்துதல் அடிப்படையில் செய்த செயல்களுக்காக தான் நாம் வருந்துகிறோம். கோபத்திலோ காமத்திலோ அளவு கடந்த பேராசையிலோ இயங்கிய நிலைகளில் சில காரியங்களை செய்துவிட்டு வருந்தியிருக்கிறோம். இதற்கு போதை வயப்பட்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அதீத குணங்களே பெரும் போதையை விளைவிக்க வல்லவை. எனவே சில சமயம் தவறு செய்வது மனித இயல்பு என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரம் மீண்டும் அந்தத் தவறு வாராதிருக்க வழி தேடச் சொல்கிறது. ஒருவர் தொழில் தொடங்குகிறார். அந்த தொழிலில்  சில நேரங்களில் நட்டம் வருகிறது என்றால் அந்த நட்டத்திற்கு அவர் எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். யார் யாரையோ குற்றம் சாட்டலாம். ஆனால் நட்டத்திற்கு பொறுப்பேற்கும் இடத்தில் அவர்தான் இருக்கிறார்.

இது தொழிலுக்கு மட்டுமல்ல நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இது பொருந்தும் கர்ம வினைகளும் லாப நட்ட கணக்குகள் நம்முடைய பொறுப்பிலேயே எப்போதும் எழுதப்படுகின்றன. நாம் செய்கிற செயல் தான் நம் கணக்கில் இருக்கிறது ஆனால் கர்மவினைகளை பொறுத்தவரையில் நாம் என்ற எண்ணம் கூட நம்முடைய கணக்கில் வைக்கப்படுகிறது அதனால் தான் திருவள்ளுவர்,

‘‘உள்ளத்தால் உள்ளலும் தீதே
 பிறர் பொருளை கள்ளத்தால் கள்வேம் எனல்’’
 
என எச்சரிக்கிறார். எனவே வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்கள் முதலில் தங்கள் எண்ணங்களை சொற்களை செயல்களை செதுக்கிக் கொள்ள வேண்டியவர்கள் ஆகிறார்கள். நாம் தினசரி மேற்கொள்ளும்  தியானம் யோகா பிரார்த்தனை போன்றவையெல்லாம் நமக்குள் தன்னை நிர்மாணித்து வைத்திருக்கும் இறை சக்தியோடு தொடர்பு கொள்ள துணை செய்யும் கருவிகளாக இருக்கின்றன ஒவ்வொரு செயலிலும் நமக்கு கிடைக்கும் அனுபவம் ஆழமான புரிதல் இவையெல்லாம் மனம் சமநிலையில் இருந்து செயல்படும்போதுதான் சாத்தியமாகிறது. ஒரு செயலை நல்லவிதமாக செய்து முடிப்பவரை  செயல்வீரர் என்கிறார்கள். அப்படி அல்ல. உண்மையில் முழு ஈடுபாட்டோடு ஒரு செயலைச் செய்து அதன் விளைவுகளால் யார் பாதிக்கப்படாமல் இருக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான செயல்வீரர்கள். ஒரு மருத்துவர் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிகழ வேண்டுமென்றால் அவர் அதிலே விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். பல வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை செய்து முடித்த மருத்துவ நிபுணர் ஒருவரை தன்னுடைய குழந்தைக்கு ஓர் ஊசி போடச் சொன்னால் கூட அவருடைய கைகள் நடுங்கும்.

காரணம் அவருடைய சொந்த விருப்பு அங்கே வெளிப்படுவது தவிர்க்க முடியாது. மகாபாரதப் போரில் கர்ணன் தன்னுடைய சகோதரர்கள் தான்  எதிரே இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட சலனம் இல்லாமல் போர்  நிகழ்த்தினான். ஆனால் கர்ணனை குறி வைத்தபோது அவன் தருமனுடைய சாயலில் இருப்பதை உணர்ந்தே அர்ஜுனனுக்கு கைகள் நடுங்கின. கீதையை கேட்டவன் அர்ஜுனன். ஆனால் கீதையின் சாரமாகவே வாழ்ந்தவன் கர்ணன். நம் ஒவ்வொரு செயல்களுமே நம்மை வாழ்வின் பந்தங்களோடு மேலும் பிணைக்கக் கூடியதாகவும் இருக்கலாம். அல்லது எதைச் செய்தாலும் தீவிரமாக செய்யும் போதே அதோடு நம்மை அதிகம் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் மனத்தளவில் விலகியிருந்தும் அதே செயலை முழுமையாக செய்யலாம். முதல் நிலையில் நாம் இருந்தால் கண்ணுக்குத் தெரியாத மாயப் பிணைப்பின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். இரண்டாம் நிலையில் இருந்தால் நம்மையும் நம் செயல்களையும் நம் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள்…. எப்படி இருக்க விரும்புகிறோம்?

மரபின் மைந்தன் முத்தையா

Tags : God ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?