×

பெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. பெரம்பலூரின் புகழ் பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்டத் திருவிழா கடந்த 2013க்குப் பிறகு  5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து பெரம்பலூர் தர்மபரிபாலன சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (ஸ்ரீரங்கம்)கல்யாணி, உதவி ஆணையர் (அரியலூர்) தக்கார் முருகையா  ஆகியோரது உத்தரவின்பேரில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 8ம்தேதி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் கோயில் செயல் அலுவலர் மணி தலைமையில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, 11ம்தேதி திருத்தேரோட்ட விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் ஹம்ச  வாகனம், சிம்ம வாகனம், ஷேச வாகனம், சந்திர பிரபை வாகனம், பஞ்சமூர்த்திகள்  புறப்பாடு, யானை வாகனம், புஷ்பக விமானம், கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதியுலா நடத்தப்பட்டன. விழாவின் 7ம்நாளான 17ம்தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று(19ம் தேதி) காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெற்றது. உற்சவர் ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் எழுந்தருளிய திருத்தேரினை கோயில் குருக்களான சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில்,  உதவி குருக்கள் கவுரிசங்கர் ஆகியோர் வழிபாடு நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில்  இந்து சமய அறநிலையத்துறை (அரியலூர்) உதவி ஆணையர் தக்கார் முருகையா, கோயில்  செயல் அலுவலர் மணி முன்னிலை வகித்தனர்.

Tags : Perambalur ,Brahmapureeswarar temple ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி