ஆத்தூர்: ஆத்தூர் அருகே, பெருமாள் கோயில் தேரோட்டத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கரிய வரதராஜ பெருமாள் கோயில், சன்னாசி வரத சுவாமிகளின் ஜீவசமாதி ஆகியவை உள்ளன. இந்த கோயிலில், ஆண்டு தோறும் தை அமாவாசையை முன்னிட்டு கரியவரதராஜ பெருமாள், வேணுகோபால சுவாமி தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையை முன்னிட்டு வரதராஜ பெருமாள், வேணுகோபால சுவாமிகளின் தேரோட்டம் மாலை 4 மணியளவில் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் ஆத்தூர், மல்லியகரை, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதி மற்றும் தளவாய்பட்டியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். தேரோட்ட விழாவை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து இரவில், பாட்டு பட்டிமன்றமும் நடைபெற்றது.