திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தை பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா இன்று அதிகாலை 5.45 மணிக்கு மகர லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதியுலா வருகிறார்.
2ம் தேதி காலை கருட சேவையும், 4ம் தேதி தை அமாவாசையையொட்டி அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6ம் தேதி காலை தேர் திருவிழாவும், 8ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.