சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதான் வரவேண்டும் என பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். ஓ பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்கிறார், அவர் பாஜவில் இணைந்து மாநில தலைவராகட்டும் என சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், எம்எல்ஏ பாலசுப்பிரமணியம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வர வேண்டும் என அனைத்து நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றினர். இதுகுறித்து வெங்கடாஜலம் எம்எல்ஏ அளித்த பேட்டி: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சிக்கு துரோக செயல்களை செய்து வருகிறார். முதல்வராக இருந்து பதவி சுகம் அனுபவித்த அவர், அவரது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டார். அவரது தம்பி ராஜாவை வைத்து சசிகலாவை சந்திக்க வைத்ததும் துரோகம். அவரது சின்னமகன் சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என கூறியது இன்னொரு துரோகம். ஓ.பன்னீர்செல்வம் பாஜவில் இணைந்து மாநில தலைவராகலாம், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் ஆகலாம். இனிமேல் அவரை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் என்றார்.திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கூட்டம் வாணியம்பாடியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர்: திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிற்கு ஒற்றை தலைமையாக கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கூறுகையில், ஓபிஎஸ் எங்களுக்கு அண்ணன்தான். இருப்பினும் தலைவர் என்ற நிலை வருகையில் எடப்பாடி பழனிசாமியையே தேர்ந்தெடுக்கிறோம் என்றார். இதேபோல், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….
The post அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் தீர்மானம்: ‘ஓபிஎஸ் பாஜவில் இணைந்து மாநில தலைவராகட்டும்’ appeared first on Dinakaran.