×

3 பாகமாக உருவாகும் வேள்பாரி: இயக்குனர் ஷங்கர் தகவல்

சென்னை: மன்னர் வேள்பாரி கதையை 3 பாகமாக உருவாக்க இருப்பதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார். இது குறித்து ஷங்கர் கூறியதாவது:‘இந்தியன் 2’ நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ‘இந்தியன் 3’ வெளியாகும். இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரண், கியரா அத்வானி நடிப்பில் உருவாக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளும் நடக்க உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு வேள்பாரி சரித்திரத்தை படமாக்க இருக்கிறேன். இது 3 பாகமாக உருவாகிறது. கொரோனா சமயத்தில் தான் வேள்பாரி நாவலை படித்து முடித்தேன். மிகவும் சுவாரஸ்யமான வகையில் அவரது வாழ்க்கை சம்பவங்கள் இருந்தன. படிக்க படிக்க அவை காட்சிகளாக விரிந்தன.

அதன் பிறகு அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அவை மொத்தம் 3 பாகமாக உருவாகும். இதில் சூர்யா நடிப்பாரா எனக் கேட்கிறீர்கள். வேள்பாரியாக நடிப்பது யார் என்பது பிறகு முடிவாகும். எனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வெவ்வேறு ஜானர்களில் வேறு இயக்குனர்களை வைத்து படங்களை தயாரித்தேன். கடைசியாக ஓரிரு படங்கள் ஓடவில்லை. அப்போது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படும் பிரச்னைதான் எனக்கும் ஏற்பட்டது. இப்போது ‘இந்தியன் 3’, ‘கேம் சேஞ்சர்’ படங்களை முடித்த பிறகு மீண்டும் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக படங்களை தயாரிப்பேன். ‘இந்தியன் 2’ படத்துக்காக நயன்தாராவை நடிக்க கேட்டது உண்மைதான். கால்ஷீட் பிரச்னை, படம் கொஞ்சம் தள்ளிப்போனது உள்ளிட்ட விஷயங்களால் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதில்தான் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் சுகன்யா கேரக்டர் தேவைப்படவில்லை. அதனால் அவரை படத்துக்குள் கொண்டு வரவில்லை. இவ்வாறு ஷங்கர் கூறினார்.

The post 3 பாகமாக உருவாகும் வேள்பாரி: இயக்குனர் ஷங்கர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shankar ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிளாக்: விமர்சனம்