×

கோர்ட்டில் சாட்சி கூறிய தர்ம சாஸ்தா

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தாலுகாவிற்குட்பட்டது  அச்சன் கோயில். இங்குள்ள மூலவர் தர்ம சாஸ்தா, அரசனாக  வீற்றிருக்கிறார். இக்கோயிலைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்தக் கோயிலில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலுவலர் பணியில் ஒருவர்  இருப்பார். அதாவது நம்ம ஊர் கோயில் செயல் அலுவலர் பணியினை கேரளாவில் ஸ்ரீ கார்யம் என்று அழைப்பர். ஆங்கிலேயர் காலத்தில் அச்சன் கோயிலில் ஸ்ரீ காரியமாக இருந்தவர் தர்ம சாஸ்தா மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். இந்த சமயத்தில்  அச்சன்கோவில் வனப்பகுதியிலுள்ள அநேக மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள்  காணாமல் போன மரங்களின் விபரங்களை ஸ்ரீ கார்யத்திடம் கேட்டார்கள்.

என்ன விபரம் கொடுப்பது என்று புரியாத அவர் திகைத்தார். சரியான பதில்  தராத காரணத்தால் நீதிமன்றதுக்கு வந்து வழக்கை சந்திக்குமாறு அதிகாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஒரு தவறும் செய்யாத தன் மேல் வீண் பழி வந்ததே என்று மன வருத்தமுற்ற ஸ்ரீ கார்யம் திருநெல்வேலி ஜில்லாவை அடைந்து நீதிமன்றதுக்கு  செல்ல சத்திரத்தில் காத்திருந்தார். அப்போது தர்ம சாஸ்தா கோயிலின் திருவிழா நடைபெறும் சமயம். இதைக்கண்டு தன்னிலை இழந்த பக்தர், ‘‘உன்  மேல் பக்தி செலுத்தியதைத் தவிர வெறொன்றும் அறியாத என்னை இப்படி துன்பத்தில் ஆழ்த்தி விட்ட உனக்கு விழா ஒரு கேடா?’’ என்று சொல்லி  வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தார். அன்றிரவே பகவான் அவர் கனவில் தோன்றி ‘‘நான் என் பக்தர்களை ஒரு நாளும் கைவிடுவதில்லை.

நாளை நீதிமன்றத்தில் ஆஜராகும் நீ, நீதிபதி மரங்கள் வெட்டியது யார்? என்று கேட்டால் எல்லாம் மணிகண்டனுக்கு தெரியும்’’ என்று மட்டும் சொல்  என்றார். மறுநாள் கோர்ட்டில் ஆங்கிலேய நீதிபதி இவரிடம் கேள்விகள் கேட்க, இவரும் எல்லாம் தெரிந்தவன் மணிகண்டன் தான் அவன் வந்து சாட்சி  சொல்லுவான்’’ என்றார். அதை கேட்ட நீதிபதி அப்படி ஒரு ஆள் இருப்பதாக நினைத்து மணிகண்டனை அழைக்க உத்தரவிடுகிறார் நீதிபதி. அதன்படி  நீதிமன்ற ஊழியர் அழைத்தார். ‘‘மணிகண்டன்! மணிகண்டன்! மணிகண்டன்! என மும்முறை அழைத்தார். திடீரென நீதிமன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் திகைக்கும் வண்ணம் நீதிபதி சாட்சிக் கூண்டில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால்  அந்த உருவம் யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. நீதிபதிக்கு மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. அவரிடம் விசாரித்த நீதிபதி, ஸ்ரீகார்யத்தை நோக்கி ‘‘மணிகண்டன் அளித்த கணக்குகளின்படி நீ நிரபராதி. உன் மேல் தவறில்லை’’ என தீர்ப்பளித்தார். இந்த நிகழ்வைக்கண்டு நீதிமன்றத்திலிருந்த  அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர். என்ன நடந்தது. யாரிடம் பேசினார் நீதிபதி.

உடனே ஸ்ரீ கார்யம் நிரபராதி என ஏன் நீதிபதி கூறினார். என வியப்பில் இருக்க, ஸ்ரீ கார்யம் சாஸ்தா மீது கொண்ட பக்தியின் மேலீட்டால் மயங்கி  விழுந்தார். தீர்ப்பு முடிந்து நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். வரும் வழக்கறிஞர்கள் நடந்தது குறித்து கேட்டனர். சிலர் கேள்வி  எழுப்பினர். நீதிபதி சாட்சி சொல்ல மணிகண்டனர் என்பவர் வந்தார். அவர் கூறிய சாட்சிகளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார்.  வந்தவன் சாதாரண மனிதன் அல்ல, அச்சன் கோவில் அரசன் அந்த தர்ம சாஸ்தா என்று பலரும் பதில் கூறினார்கள். அதனை சோதனை செய்ய தானே அச்சன் கோவில் புறப்பட்டு வந்தார் நீதிபதி. கோயில் கொடிமரத்தை நெருங்கியதும் கர்ப்பகிரஹம் தென்பட்டது. ‘‘மூலஸ்தானத்தை பார்த்தார் நீதிபதி. அவருக்கு கோர்ட்டிற்கு வந்த கோலத்தில் சாஸ்தா காட்சி கொடுத்தார். உடனே, வந்தது இவன் தான். இவன்  தான் என உணர்ச்சி பூர்வமாக கத்தினார். சாஸ்தாவிடம் சரண் புகுந்தார் அந்த ஆங்கிலேய நீதிபதி.

- சு.இசக்கிமுத்து

Tags : Dharma Sastha ,court ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...