கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் கிராமம் மேட்டு தெருவில் ஸ்ரீமங்கள மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, நேற்று காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி, நவகிரக ஹோமம், கோபூஜை, தனபூஜை நடந்தது.
மாலை 5 மணிக்கு அங்குர பூஜை, கும்பாலங்காரம், கடம் யாக பிரவேசம் மற்றும் மண்டப பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை சோமபாலிகா பூஜை, யாக மண்டப பூஜை, வேதிகா பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடும், 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு மண்டலாபிஷேக பூஜையும் ஆரம்பமாகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.