×

திருவள்ளூரில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்:திருவள்ளூர் மாவட்டம் ராஜா நகரம் ஊராட்சியில் வசித்து வரும் தலித் மக்களுக்கு 1994ல் 67 குடும்பத்திற்கும், 2002ல் 40 குடும்பத்திற்கும் என அதிமுக ஆட்சிக் காலத்தில் 107 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை அம்மக்களால் இவ்விடத்தில் குடியேற முடியாத நிலையில் இப்பிரச்னை மாநில மனித உரிமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.இதில் தலையிட்ட மாநில மனித உரிமை ஆணையம், இப்பிரச்சனையில் காலம் தாழ்த்திய மாவட்ட வருவாய்த்துறை பயனாளிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டுமெனவும், மேலும் மூன்று மாதத்திற்குள் வீட்டுமனை ஒதுக்கி தர வேண்டுமென்றும் மாவட்ட வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் அவ்வுத்தரவும் கூட இதுவரை அமலாகவில்லை.அதேபோல், கும்மிடிப்பூண்டி வட்டம், ஆரம்பாக்கம் அருகிலுள்ள தோக்கமூர் ஊராட்சியில் 250 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் நிலவும் சாதிய ஆதிக்கம் காரணமாக, தலித் மக்கள் கோயில் மற்றும் பொது இடத்திற்கு வரக்கூடாது என்பதற்காக கோவிலை சுற்றி சிமெண்ட் போஸ்ட் நடப்பட்டு கம்பிவேலி அமைக்க முயற்சியும் நடப்பதாக தெரிகிறது. அதே பகுதியில் வீட்டுமனையில்லாத தலித் மக்களுக்கு ஆதி திராவிட நலத்துறையின் கீழ், 92 குடும்பங்களுக்கு பட்டா அளிப்பதற்கென தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று தலித் பயனாளிகளிடமிருந்து ரூ18 லட்சம் நிதி பெற்று நில உரிமையாளருக்கு வழங்கப்பட்டும் இதுவரை நிலமும், பட்டாவும் அம்மக்களுக்கு அளிக்கப்படவில்லை.அதே போல, விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நீண்டகாலமாக பேருந்து நிறுத்த நிழற்குடை இல்லாதால் பேருந்து நிழற்குடை வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில் ஆறு மாதத்திற்கு முன்னால் நிழற்குடை கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அரசு நிர்வாகம் தீர்மானித்த இடத்தில் நிழற்குடை கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள ஒரு சில சாதிய ஆதிக்க சக்தியினர் நிழற்குடை கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சனைகளில் தமிழக அரசு உடனடியாக தலையிடுவதோடு கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.அதன்படி, ராஜா நகரம் தலித் மக்களுக்கு ஒதுக்கிய இடத்தில் உடனடியாக குடியமர்வு செய்திட வேண்டும். தோக்கமூர் தலித் மக்கள் வீட்டை சுற்றி எழுப்பி உள்ள சுவரை அகற்றிடவும், அரசு பொது நிலத்தில் கம்பி வேலி அமைக்க எழுப்பியுள்ள சிமெண்ட் போஸ்ட்டுகளை அகற்றிடவும், 92 தலித் குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தரவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post திருவள்ளூரில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chief Minister ,M. K. Stalin ,Tiruvallur ,Chennai ,K.Balakrishnan ,M.K.Stalin ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...