×

ஆற்றங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றம் : யானை மீது கொடி ஊர்வலம்

ராதாபுரம்:  ஆற்றங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா திருத்தலம், புகழ்பெற்ற இஸ்லாமிய திருத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா, வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான கந்தூரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் துவங்கியது. 7 மணிக்கு முகம்மது யூசுப் ஆலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல் நடந்தது.

காலை 8 மணிக்கு புலிமான்குளம் அரண்மனையில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ள தர்காவுக்கு யானை மீது கொடி, சந்தனக்குடம் ஊர்வலமாக தர்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளிவாசலில் சந்தனம் மெழுகும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 10 மணிக்கு நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல் நடைபெற்றது.

சலாஹீத்தீனால் ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லீஸ் நடந்தது. இரவு ஹபீனுல் காதரால், ஹதீஸ் ஆரம்பித்தல், நள்ளிரவில் பீர் முகம்மதால், முஹம் அஹமது ஷா ஆகியோரின் சொற்பொழிவு நடந்தது. கந்தூரி விழாவின் 2ம் நாளான இன்று காலை 5.30 மணிக்கு நயாஸ் அஹ்மத் பிஜிலியால் நன்றி நவிலலும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதுதலும் நடந்தது. காலை 6 மணிக்கு நயாஸ் அஹ்மத் பிஜிலி மற்றும் ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி தலைமையில் நேர்ச்சை விநியோகம் நடக்கிறது. இன்றிரவு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags : festival ,mosque ,riverbank ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...