திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் நடந்த கார்த்திகை மாத 2வது சோமவாரத்தையொட்டி பெண்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் வரும் சோமவார திங்கட்கிழமைகளில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்திகை மாதத்தின் 2வது சோமவாரமான நேற்று காலை முதலே கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர். இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தெப்பக்குளத்தின் அருகே தேங்காய், நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றால் விளக்கு ஏற்றி குளத்தில் விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.