×

தாம்பரம் சானடோரியத்தில் மகளிர் விடுதியில் நுழைந்த வாலிபர்; மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் செயல்படும் தனியார் மகளிர் விடுதியில் நேற்று முன்தினம் இரவு நேபாளத்தை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு, விடுதி காப்பாளர் விரைந்து வந்தார். உடனே அந்த நபர் விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அங்கிருந்து நகர முடியாமல் தவித்தார். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தாம்பரம் காவல் நிலையத்திலிருந்து வந்த ரோந்து போலீசார், அந்த நபரை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் இந்த நபரை ஏன் அழைத்து வந்தீர்கள், அவரை வெளியே அனுப்புங்கள் எனக்கூறி அந்த நபரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் அந்த நபரை ரோந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்ட போலீசார் தாம்பரம் காவல் நிலைய எல்லையை தாண்டி, பீர்க்கன்காரணை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்று, சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், அந்த நபர் சாலையில் அமர்ந்தபடி, வலியால் அலறி துடித்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பீர்க்கன்காரணை போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாம்பரம் போலீசார்தான் தன்னை கொண்டுவந்து விட்டு விட்டு சென்றதாக, அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திலிருந்து, தாம்பரம் போலீசாரை  தொடர்புகொண்டு உங்கள் எல்லையிலிருந்து எதற்காக எங்கள் காவல் நிலைய எல்லையில் கொண்டுவந்து அந்த நபரை விட்டு விட்டுச் சென்றீர்கள் என கேள்வி  எழுப்பினர். இதை அடுத்து மீண்டும் தாம்பரம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை அழைத்துக்கொண்டு சென்றனர். விடுதியில் அத்துமீறி புகுந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், அவரை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது….

The post தாம்பரம் சானடோரியத்தில் மகளிர் விடுதியில் நுழைந்த வாலிபர்; மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது appeared first on Dinakaran.

Tags : Tambaram Sanatorium ,Tambaram ,Nepal ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...