சீர்காழி: சீர்காழி திருக்கோலக்காவில் ஓசைநாயகி அம்மன் தாளபுரீஸ்வரர் உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருஞான சம்மந்தருக்கு ஓசை நாயகி பொற்றாலம் வழங்கியதும் வாய் பேச முடியாதவர்கள் கோயிலில் வந்து வழிபாடு நடத்தினால் பேச்சு வரும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் காலவமகா முனிவரின் சாபத்தினால் தொழுநோய் வந்து சூரிய பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமிருந்து சுவாமியின் அருளை பெற்று நோய் நீங்கி குணமடைந்தால் அவர் கோயில் முன்பு உருவாக்கிய சூரிய புஷ்கரணி தீர்த்தத்தை உருவாக்கினார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தீர்த்தவாரியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி அம்மன், விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்பு தீபாராதணை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் சூரிய புஷ்கரணியில் எழுந்தருளி அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் வர்த்தக சங்க தலைவர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.