திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் நடந்த கார்த்திகை மாத சோமவார வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சோமவாரத்தில் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாதத்தின் 2வது சோமவாரமான நேற்று காலை முதலே கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர். இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தெப்பக்குளத்தின் அருகே தேங்காய், நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றால் தீபம் ஏற்றி குளத்தில் விட்டும் வழிபாடு செய்தனர்.