திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்கள் மற்றும் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தலைமையில் ஆகம முறைப்படி தீபாவளி ஆஸ்தான பூஜைகள் மேற்கொண்டனர். இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், மாலை 6 மணிக்கு மூலவர் சந்நிதி, கருடாழ்வார் சன்னதி, ரங்கநாத மண்டபம், சைன மண்டபம், கொடிமரம், பலி மண்டபம், யோக நரசிம்மர் சன்னதி, பேடி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அர்ச்சகர்கள் தீபங்களை ஏற்றினர்.