திருமலை: சந்திரகிரி கோதண்டராமர் கோயிலில் யாக பூர்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருப்பதி அடுத்த சந்திரகிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் பூஜைகளில் அர்ச்சகர்கள் மூலமாகவோ, பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அல்லது கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாக செய்யப்படும் பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி பவித்ர உற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்கு இடையே சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணியளவில் சீதா, லட்சுமண, அனுமந்த சமேத கோதண்டராமர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் துணை செயல் அலுவலர் சுப்பிரமணியம், கோயில் ஆய்வாளர் கிருஷ்ண சைதன்யா உட்பட அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.