×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திலிருந்து வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர். இதனை தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர். இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிபதி அருணாசலம், விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், திருவண்ணாமலை உதவி ஆணையர் மோகனசுந்தரம், விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோயில் அறங்காவல் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, செல்வம், ரமேஷ், சரவணன், சேகர், கோயில் ஆய்வாளர் அன்பழகன், மேனேஜர் மணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags : Swamy Swamy Temple ,devotees ,Thalaiyalanoor Angalamman Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...