‘‘இலை கட்சியில் இன்னும் மாநிலங்களவை உறுப்பினர் பஞ்சாயத்து முடியவில்லை போலிருக்கிறதே… இரண்டு விவிஐபிக்களும் சரிசமமாக பிரித்து கொண்டாலும் யாருக்கு தருவது என்று தெரியமால் குழப்பத்தில் இருக்கிறார்களாமே… அந்த குழப்பதை ஒரு சீனியர் தனக்கு சாதகமாக மாற்ற நினைப்பது உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியில் மதுரை மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக முன்னாள் மாநகர தந்தை இருக்கிறார். போயஸ்கார்டனில் பவர்புல் பெண்மணி இருந்தவரை இவரை ஓரங்கட்டி வைத்திருந்தாராம். அவருக்கு பின் தற்போது அதிக அதிகாரம் செலுத்தி வருகிறாராம். மாநகர தந்தையாக இருந்தபோதே தனது வாரிசை எப்படியும் அதிகார பதவிக்கு கொண்டு வர வேண்டுமென திட்டம் தீட்டி தனது நிழலாக இருக்கச் செய்தாராம். மாநகராட்சியின் டெண்டர் முழுவதும் இவரது கைவசம் தான் சென்றதாம். போதா குறைக்கு ஐடி விங்கில் மாநில பொறுப்பும் பெற்று கொடுத்து, கடந்த 2019ல் எம்பி தேர்தலில் நின்று கோடிகளை செலவிட்டும் தோல்வி தான் மிஞ்சியது. தனக்கு தன் பகுதியில், ராசியில்லாதவர் என்ற பெயர் உள்ளதா அடிபொடிகள் சொன்னார்களாம். அதே பெயர் தனது வாரிசுக்கும் வந்துவிடக் கூடாது என்ற வேகத்தில், எப்படியாவது மாநிலங்களவை எம்பி பதவியை பெற்றுத் தந்துவிட வேண்டும் என ஒரே நோக்கத்தில் மீண்டும் கோடிகளை செலவிட்டு வருகிறாராம். இதற்காக இலை கட்சியின் இரட்டையர்களை தனித்தனியே சந்தித்து தேவையான அளவுக்கு வைட்டமின் ‘‘ப’’ தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கான முன்தொகையும் கைமாறிவிட்டதாம். இதனால், தனது வாரிசு எப்படியும் எம்.பி ஆகிவிடுவார் என்ற தெம்பில் சுற்றிவருகிறாராம். தனது மகன் பெயர் எம்.பி. சீட்டுக்கு பரிந்துரை செய்யப்படும். மக்கள் செல்வாக்கு இல்லையென்றால் என்ன. கரன்சி செல்வாக்கு உள்ளதே குழப்பதை சாதகமா பயன்படுத்தி கொண்டாராம் அந்த இலை சீனியர். ஆனால், கரன்சி எடுபடாது என்றே இலை வட்டாரத்தில் பேச்சு ஓடுகிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எந்த முகாம் நடத்தாமலேயே அரசு பணத்தை சுருட்டினாங்களாம்… விளக்கமாக சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வறட்சி மாவட்டத்தின் கடலாடும் ஊரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடத்தாமலேயே பல லட்சம் சுருட்டிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளாம். இலை ஆட்சி காலத்தில் செல்வாக்கால் நியமிக்கப்பட்ட பொறுப்பு முதல்வர்கள் காலத்தில் 2016 முதல் 2020 வரை பெரும் தொகை சுருட்டப்பட்டுள்ளதாம். கிராமப்புறங்களில் ஒரு வாரத்திற்கு நடக்கும் இந்த முகாமிற்காக ஆண்டுதோறும் பொது நிதியாக ரூ.16,235ம், சிறப்பு திட்ட முகாமிற்கு ரூ.22,500ம் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படுமாம். இதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.4800, ஆபீஸ் செலவு ரூ.2200 போக மீத பணத்தை மண்வெட்டி, கடப்பாரை, உணவு, சமையல் கூலி, மரக்கன்றுகளுக்காக செலவிட வேண்டுமாம். இந்த காலகட்டத்தில் முகாம் நடத்தாமலேயே நடந்தததாக கூறி சுருட்டியிருக்கும் பொறுப்பு முதல்வர்களின் முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாம். செலவு செய்த குறிப்பு மட்டும் தான் உள்ளதாம். ரசீது உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லையாம். மரக்கன்று நட்டதாக கூறிய இடத்தில் சிறு புல் கூட இல்லை என்பது வேதனையாம். இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். மாணவர்களுக்கு ஒரு டீ கூட வாங்கித் தராமல் மொத்தமாக சுருட்டிய விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை பாயும் என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எந்த துறை அதிகாரிகள் கலக்கத்தில் இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மிஸ்டர் பத்தூர் ஊர்ல பிரியாணிக்கு பெயர் போன சார் பதிவு அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து போனவரின் பெயரில இருந்த சொத்து, உயிருடன் இருப்பதாக கூறி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாம். இந்த விவகாரம் இறந்து போனவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பதிவு அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் மூலம் பதிவு செய்ததாக புகார் அளித்தார்களாம். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச்சு. இதையடுத்து மாவட்ட பதிவாளர் நடத்திய விசாரணையில், இறந்த நபர், உயிருடன் இருப்பதாக டாக்டர் அளித்த சான்றிதழ் வைத்து ஆள் மாறாட்டம் செய்து பதிவு நடந்துள்ளது தெரியவந்ததாம். உடனே போலீசில் புகார் செய்யும்படி சார் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய டாக்டர், பத்திரம் எழுதுபவர் மற்றும் அதிகாரிகள் உடந்தை என மாவட்ட பதிவாளர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும். இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்பதால், பிரியாணி ஊரில் பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கலக்கத்தில் உள்ளனராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நாகர்கோவில்ல நடந்த வித்தியாசமான விஷயத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவிலில் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இரவு 11 மணிக்கு மேல் பாலியல் மெசேஜ்கள் அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக மாணவி புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் குறைவு பாம் என்று நடவடிக்கை எடுக்காமலேயே அனுப்பிவிட்டார்களாம். சம்பளம் குறைவாக இருந்தால் தவறு சரியாகிவிடுமா என்கின்றனர் மாணவ அமைப்பினர்…’’ என்றார் விக்கியானந்தா. …
The post கரன்சி கொடுத்து மாநிலங்களவை எம்பி பதவி வாங்கும் இலை கட்சி வாரிசு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.