திருப்பூர் : திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பது அந்த பகுதி பொதுமக்களையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் கூலிபாளையம் பகுதியில் நஞ்சராயன் குளம் உள்ளது. 1498 ஆம் ஆண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் அவருடைய தளபதி நஞ்சராயன் என்பவரால் கட்டப்பட்ட இந்த குளம் நஞ்சராயன் குளம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஏக்கர் நீர்ப் பரப்பு கொண்ட இந்த குளமானது நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் நடுவே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த குளத்தில் தண்ணீர் தேக்கப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாசன வசதிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் சேர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாபெரும் சாக்கடை கழிவுநீர் தேக்கம் அடைந்தது போல மாறி இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சாயக் கழிவுநீர் கலப்பது குறைந்து விட்டது. இதனால் தற்போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் நஞ்சராயன் குளத்திற்கு வந்து செல்கிறது. ஆயிரக்கணக்கான வகை பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து தனது குஞ்சுகளுடன் வெளி நாடுகளுக்கு திரும்பிச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த குளத்தினை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பறவைகள் வருவதை பாதுகாக்க வேண்டும் என்று திருப்பூர் இயற்கை அறக்கட்டளையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இதையடுத்து இந்த குளத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் நேற்று கரையோரம் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. குளத்தின் அதிகப்படியான நீர் தகுதியான கிழக்குப் பகுதியில் உள்ள ஷட்டர்கள் மற்றும் கரையோரம் உள்ள செடிகளில் செத்துக் கிடக்கும் மீன்கள் படிந்து உள்ளன. இவ்வாறு இறந்த மீன்கள் குளத்தில் நீர் வெளியேற்று பாதைகள் வழியாக வெளியேறியும் வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. இத்துடன் குளக் கரையிலும் ஏராளமான மீன்கள் செத்து கிடக்கின்றன. இது அந்த பகுதி பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நஞ்சராயன் குளத்தில் சாயக் கழிவுநீர் திருட்டு தனமாக கலப்பதால் இவ்வாறு மீன்கள் செத்து மிதக்கின்றன சாயக்கழிவு நீரை குளத்திலும், நல்லாற்றிலும் வெளியேற்றும் ஆலைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் appeared first on Dinakaran.