திங்கள்சந்தை : பெரும்செல்வவிளை வேம்பனூர் குளம் கரையில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.நாகர்கோவில் மாநகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதி பெரும்செல்வவிளை. இங்கிருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் வேம்பனூர் குளம் உள்ளது. குளத்தை ஒட்டி பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் அருகில் சமீப காலமாக குப்பை கழிவுகளை மக்கள் கொட்டி வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆட்டோ, டெம்போ, பைக்குகளில் வந்து குப்பைகளை கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. சில நேரங்களில் பிளாஸ்டிக், துணி, உணவுக் கழிவுகளை கொட்டிவிட்டு எரித்து விட்டு சென்று விடுகின்றனர். நீர்நிலை பகுதியில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளால் மழை காலங்களில் தண்ணீர் வழியாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வேம்பனூர் குளக்கரையில் கொட்டப்பட்டு வரும் குப்பை கழிவுகளை அகற்றி, மேற்கொண்டு குப்பை கொட்டாத வகையில் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….
The post வேம்பனூர் குளக்கரையில் குவியும் குப்பைகள்: நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.