×

குமாரபாளையம் அருகே கோர விபத்து இன்ஸ்பெக்டரின் மகள்கள் படுகாயம்-கார் மீது மினிலாரி, லாரி அடுத்தடுத்து மோதியது

குமாரபாளையம் : குமாரபாளையம் அருகே நடந்த விபத்தில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டரின் இரு மகள்கள் படுகாயமடைந்தனர். கார் மீது மினிலாரியும், லாரியும் அடுத்தடுத்து மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.குமாரபாளையம் பத்திரபதிவு அலுவலக பகுதியில் வசிப்பவர் வெற்றிவேல். இவரது மனைவி தேவி, சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெயரிதா(19), ஜெய்சசிகா(11) என்ற மகள்கள் உள்ளனர். ஜெயரிதா சென்னையில் மூன்றாமாண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார். இளையமகள் இங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயரிதா நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்தார். நேற்று மதியம் ஜெயரிதா தனது தங்கையுடன் சங்ககிரி சென்று தாய் தேவியை பார்த்துவிட்டு மாலையில் காரில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை ஜெயரிதா ஓட்டி வந்தார். சங்ககிரியிலிருந்து குமாரபாளையம் பைபாசில் அருவங்காடு அருகே கார் வேகமாக வந்தபோது, பக்க சாலையிலிருந்து வந்த டூவீலர் மீது மோதாமலிருக்க காரின் வேகத்தை ஜெயரிதா குறைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் சென்டர் மீடியனில் ஏறி அடுத்த சாலையில் நுழைந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், மினிலாரியும் அடுத்தடுத்து கார் மீது மோதியது. இதில் கார் உருக்குலைந்து போனது. காரில் வந்த ஜெயரிதாவுக்கு கால்முறிந்து தலையில் பலத்த காயமேற்பட்டது. ஜெய்சசிகாவுக்கு இரண்டு கால்களிலும், இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post குமாரபாளையம் அருகே கோர விபத்து இன்ஸ்பெக்டரின் மகள்கள் படுகாயம்-கார் மீது மினிலாரி, லாரி அடுத்தடுத்து மோதியது appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Sangagiri Police ,Minilari ,Dinakaran ,
× RELATED மது விற்ற 5 பேர் கைது