×

நெல்லையில் ரூ1.40 லட்சத்துக்கு விற்ற குழந்தை கேரளாவில் மீட்பு: தாய் உள்பட 4 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள க.உவரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கசெல்வி(32). முதல் கணவருடன் இவருக்கு ஆர்த்தி(19), தரணி(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தங்கசெல்வி, அதே ஊரைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஜலக்ஷிகா என பெயரிட்டுள்ளனர். 3வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை விற்க முடிவு செய்துள்ளனர். திசையன்விளை அருகேயுள்ள கடக்குளத்தை சேர்ந்த செல்வக்குமார். இவரது மனைவி சந்தனவின்சியா. இவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கோட்டயம் சென்று அங்கு குடும்பத்துடன் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லாததால், கூட்டப்பனை டாடா குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரியப்பன்(46) என்பவர் மூலம் தங்கசெல்வியின் குழந்தையை ரூ1.40 லட்சம் கொடுத்து வளர்ப்பதற்காக வாங்கியுள்ளனர்.குழந்தை விற்பனை குறித்து நெல்லை குழந்தைகள் நல காப்பகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளா சென்று குழந்தையை மீட்டார். மேலும் குழந்தையை விலைக்கு வாங்கிய செல்வக்குமார், அவரது மனைவி சந்தன வின்சியா, குழந்தையின் தாய் தங்கசெல்வி, புரோக்கரான ஆட்டோ டிரைவர் மாரியப்பன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை ராஜலக்ஷிகா ஆலங்குளத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது….

The post நெல்லையில் ரூ1.40 லட்சத்துக்கு விற்ற குழந்தை கேரளாவில் மீட்பு: தாய் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nellai ,Thangaselvi ,K.Uvari Annanagar ,Vektianvilai ,Nellai district ,Aarti ,Dharani ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...