வேலூர் : வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அரங்கேறி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வலம் வந்து தமிழகத்தின் இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற கேள்வியை வைத்துள்ளது. இக்கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் ஆசிரியரை அடிக்கப்பாயும் மாணவர்களின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. மேற்கண்ட தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் வேதனையை ஏற்படுத்திய நிலையில், மூர்க்கமான மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும். மேலும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்லாத பிளஸ்2 சி பிரிவு மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் இதுவரை தாங்கள் அமர்ந்து பாடம் கற்ற இரும்பாலான மேசை, நாற்காலி, பென்ச்சுகளை அடித்து நொறுக்கினர். இதையறிந்து அங்கு வந்து அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கேட்ட ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டலாக பார்க்கவே அவர்கள் நமக்கேன் வம்பு என்று பாகாயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.பாகாயம் போலீசார் தொரப்பாடி பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், ஆளுக்கொரு திசையாக ஓடி சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘திங்கட்கிழமை (இன்று) விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்….
The post வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை, நாற்காலிகளை உடைத்து மாணவர்கள் அட்டகாசம்-போலீசாரை கண்டதும் சுவரேறி குதித்து ஓட்டம் appeared first on Dinakaran.