அகமதாபாத்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், சொந்த கட்சியை விமர்சித்த நிலையில், பாஜவை புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜவின் கோட்டையான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை பாஜ ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் நிலையில், மற்ற மாநில தேர்தலைப் போல, எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் சித்து விளையாட்டை பாஜ இப்போதே தொடங்கி விட்டது. கடந்த 2015ல் குஜராத்தில் படிதார் சமூகத்தினருக்காக பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக இவர் காங்கிரசில் இணைந்தார். இப்போது குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகிக்கிறார்.இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து, மற்றொரு படிதார் தலைவரான நரேஷ் படேலை கட்சியில் இழுக்க காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. இதனால் ஹர்திக் படேல் அதிருப்தி அடைந்துள்ளார். காங்கிரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்த அவர், கட்சி மேலிடம் தனது திறமையை பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும், தான் கட்சியிலிருந்து விலக வேண்டியிருக்கும் என்றும் கட்சி மேலிடத்திடமும் புகார் செய்தார். இது குறித்து ஹர்திக் படேல் அளித்த பேட்டியில், ‘‘பாஜவின் சமீபத்திய அரசியல் முடிவுகள், அதன் சிறந்த முடிவெடுக்கும் திறனை காட்டும் விதத்தில் உள்ளன. இதை நாம் பாராட்டவில்லை என்றாலும், ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காங்கிரசின் முடிவெடுக்கும் திறன் குறைவு என்பதை தொண்டர்களே ஒப்புக் கொள்வார்கள். இப்படி பேசுவதால் நான் கட்சி மாறப் போகிறேன் என நினைக்காதீர்கள். அதே சமயம் மக்கள் நலனுக்காக அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் வந்தால் நிச்சயம் அதை மக்களிடம் தெரிவித்து அவர்கள் விருப்பப்படி நடப்பேன்’’ என்றார். இது குஜராத் மாநில காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
The post அவுட்கோயிங்: பாஜவை புகழ்ந்து பேசும் குஜராத் காங்கிரஸ் தலைவர்; தேர்தல் ஆட்டம் ஆரம்பம் appeared first on Dinakaran.