×

மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை சாலை அமைக்க முழு ஒத்துழைப்பு: தலைமை செயலாளர் இறையன்பு ஒன்றிய அரசுக்கு கடிதம்

சென்னை: ஒன்றிய சாலை போக்குவரத்து துறை செயலாளருக்கு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை என்எச் 332ஏ-ஐ ஒப்படைப்பதற்கான தடையில்லா சான்றிதழ் தொடர்பாக கடந்த 8ம் தேதி நாளிட்ட தங்களின் நேர்முக கடிதம் குறித்து, கவனத்தை ஈர்க்க விழைகிறேன். இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசிடம் இருந்து யாதொரு பதிலும் வரப்பெறாததால், மேற்சொன்ன நெடுஞ்சாலையை ஒப்படைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வரவில்லை என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருதுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.இதுதொடர்பாக, இந்திய அரசு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடந்த மார்ச் 7ம் தேதி எனது நேர்முகக் கடிதத்தில், கடன்கள் காரணமாக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சாலை சொத்துகளை விடுவித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான வழிமுறையை மாநில அரசு செயல்படுத்தி வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளேன். மேலும், இதனை ஒப்படைப்பதால் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதில்  தனியாக கோரியிருந்தேன்.மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் தங்களை கடந்த மார்ச் 31ம் தேதி டெல்லியில் உள்ள தங்களது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மாநில அரசால் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவித்ததுடன் தடையில்லா சான்றிதழ் சுமார் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். எனவே, தமிழ்நாடு அரசிடமிருந்து யாதொரு பதிலும் இல்லை என்றும், மேற்சொன்ன சாலையை ஒப்படைப்பதற்கு மாநில அரசு முன்வரவில்லை என்றும் தெரிவிக்கும் உங்களின் அறிக்கை எனக்கு வியப்பளிக்கிறது. ஆணையத்தின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். மேற்சொன்ன விவகாரங்களுக்கு தீர்வு காண்பதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலும் அர்த்தமுள்ள  ஒருங்கிணைப்பை நல்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்….

The post மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை சாலை அமைக்க முழு ஒத்துழைப்பு: தலைமை செயலாளர் இறையன்பு ஒன்றிய அரசுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Puducherry ,Chief Secretary ,Union Govt ,Chennai ,Tamil Nadu ,Thaoyanpu ,Union Road Transport Department ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...