×

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கவர்னரின் கான்வாய் மீது கருப்பு கொடிகள் வீசப்படவில்லை: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

சென்னை: கவர்னரின் கான்வாய் மீது கற்கள், கருப்பு கொடிகள் வீசப்படவில்லை. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7.50 மணிக்கு கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டம்  ஆணைக்காரன் சத்திரம் (கொள்ளிடம்) சோதனை சாவடிக்கு வந்தடைந்தார். பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலிலிருந்து புறப்பட்டார்.இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை  பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 73 பேர் மயிலாடுதுறை சாலை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு எதிரே வடகரை சாலையில் கையில் கருப்பு கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னர் 3 அடுக்கு இரும்பு தடுப்பு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டன. அதோடு அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை வாகனங்களும் அங்கே கொண்டு வரப்பட்டன. ஆளுநர் வாகனம் மற்றும் இதர கான்வாய் வாகனங்கள் காலை 9.50 மணிக்கு ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்து சென்றது. கவர்னர் கான்வாய் சென்ற போது கவர்னரின் கவனத்தை தங்கள்பால் ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை ரோட்டை நோக்கி வீசினர். கவர்னர் கான்வாய் முழுவதும் சென்ற பின்பு காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன. உடனடியாக பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் கொடிகளைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர். கைது செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவர்னர் பாதுகாப்பிற்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இரண்டு காவல்துறை துணை தலைவர்கள், 6 காவல் கண்காணிப்பாளர்கள், 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவர்னரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்பு அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். கவர்னர் கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்பு கொடிகளை வீசி எறிந்தனர் என்பதுதான் உண்மை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்களை, தடுப்பு அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். …

The post ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கவர்னரின் கான்வாய் மீது கருப்பு கொடிகள் வீசப்படவில்லை: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : DGB Sylendrababu ,Chennai ,DGB ,Sylendra Babu ,
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு