×

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளின் மரபணுக்கள் சேகரிப்பு

ஆனைமலை :  ஆனைமலை டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி மற்றும் வரகளியாறில் முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளின் மரபணு மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி மற்றும் வரகளியாறு பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நேற்று ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் டாப்சிலிப்பில் உள்ள யானைகளின் மரபணு மாதிரிகள் எடுப்பதற்காக, ரத்த மாதிரிகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக டாப்சிலிப்பில் உள்ள 19 யானைகளின் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதில், ஒன்றிய அரசின் யானைகள் பாதுகாப்பு திட்ட ஆராய்ச்சியாளர் முத்தமிழ்ச் செல்வன், வனக்கால் நடை மருத்துவர்கள் சுகுமார், சதாசிவம், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மாதிரிகளை சேகரித்தனர். மீதமுள்ள 8 யானைகளின் மாதிரிகள் விரைவில் சேகரிக்கப்பட்டு டேராடூனில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் வனத்துறை, கோயில்கள் மற்றும் தனியார் பராமரிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளின்  ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சேகரிக்கப்பட்டுள்ளன மரபணு மாதிரிகளின் விவரம், யானைகளின் உயரம் கால் சுற்றளவு உள்ளிட்ட விவரங்களை அந்த யானையின் புகைப்படங்களுடன் இணைத்து ஒன்றிய அரசின் செயலி ஒன்றில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அனைத்து வளர்ப்பு யானைகளின் விவரங்கள் சேகரிப்பதன் மூலம், யானைகள் இடமாற்றம் செய்யும் பொழுது அவற்றை அடையாளப்படுத்திக் கொள்ளவும், கள்ளச்சந்தையில் இருந்து தந்தங்கள் மீட்கப்படும் பொழுது, அது எந்த யானையின் தந்தங்கள் என்பதை கண்டறியவும், உயிரிழந்த யானைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கவும், எளிதாக இருக்கும். தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் மரபணு மாதிரிகள் சேகரிப்பதற்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டேராடூனில் உள்ள ஒன்றிய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளின் மரபணுக்கள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Anaimalai Tiger Reserve ,Anaimalai ,Kozhikamuthi ,Varakaliar ,Anaimalai Tapsilip ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி...