புதுச்சேரி : புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரகம் சார்பில் ரெண்டெஸ்-வௌஸ் என்ற பிரெஞ்சு கலாச்சார விழா நேற்று தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று மாலை இவ்விழாவினை புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று மாலை பிரான்ஸ் நாட்டு கலைஞர்களின் ராட்சத பொம்மைகள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கடற்கரை சாலையில் ஒரு கி.மீ தூரம் வரை பிரான்சின் பொம்மலாட்ட கலைஞர்கள் நடனம் ஆடியபடியே சென்று, சுற்றுலா பயணிகள், பொதுமக்களை மகிழ்வித்தனர். இறுதியாக, கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் முன்பு பொம்மலாட்ட நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அனைவரையும் பெரிதும் கவர்ந்த இந்த ராட்சத பொம்மலாட்டத்தை பலரும் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். வரும் 9ம் தேதி வரை பிரெஞ்சு கலாச்சார விழா நடக்கிறது. இத்திருவிழாவில் இசை, நாடகம், நவீன சர்க்கஸ், பொம்மலாட்டம் உள்ளிட்ட 12 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில இந்திய கலைஞருடன் இணைந்து இந்தியாவுக்கும், பிரான்சிற்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்பை எடுத்துக்காட்டும் விதமாக விழா நடத்தப்படுகிறது. புதுச்சேரி மட்டுமின்றி சென்னை, திருவனந்தபுரத்திலும் இவ்விழா நேற்று துவங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பிரெஞ்சு துணை தூதரகம், பிரெஞ்சு கல்வி நிறுவனங்கள் செய்துள்ளன….
The post பிரெஞ்சு கலாச்சார விழா துவங்கியது புதுச்சேரி கடற்கரையில் ராட்சத பொம்மைகள் நடன நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் appeared first on Dinakaran.