×

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: 3 பேர் படுகாயம்

சின்னாளபட்டி: செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல்லில் இருந்து வேலக்கவுண்டன்பட்டி செல்லும் சாலையில் பெரியபெருமாள் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் குடான் உள்ளது. இங்கு கோயில் திருவிழாக்கள் மற்றும் இதர பணிகளுக்காக பட்டாசுகளை தயாரித்து கொடுப்பர். நேற்று இங்கு பூந்தொட்டி வெடிகளை தயார் செய்துள்ளனர். திரி மருந்துக்காக தட்டும்போது திடீரென தீ உண்டாகி பட்டாசுகளில் பரவி வெடிக்க துவங்கியது. வெடிச்சத்தம் கேட்டதும் ஊர் மக்கள் அங்கு ஓடி வந்தனர்.அப்போது வீரக்கல்லை சேர்ந்த சசி (எ) திம்மராயன் (45), சீப்பாலக்கோட்டையை சேர்ந்த கருப்பையா (46), வீரக்கல் கூத்தம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகியோர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர். திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காங்கேயன் தலைமையில் திமுகவினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  3 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.* உணவுக்கு சென்றதால் உயிர் தப்பித்தோம்வெடிவிபத்து நடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேர் மதிய உணவிற்காக வீரக்கல் வந்துள்ளனர். குடோனில் வெடிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பெண் 5 நிமிடங்களுக்கு முன்புதான் அப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ளார். இல்லையென்றால் நாங்களும் வெடி விபத்தில் சிக்கியிருப்போம் என சக தொழிலாளர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்….

The post செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sempatti ,Chinnalapatti ,Dindigul district ,Sembatti ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் பரபரப்பு!:...