- வில்லியனூர்
- வில்லியனூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- விழுப்புரம்
- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை
- பொதுமக்கள்
வில்லியனூர் : விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள் போன்றவற்றை அகற்றி சாலையை அகலப்படுத்தி வருகின்றனர். ஆங்காங்கே ஊருக்கு மத்தியில் மேம்பாலங்கள் அமைத்து வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர் அடுத்த அரியூர் பகுதியில் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை அரியூர், அனந்தபுரம், பங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மேம்பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரியூர், அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 40க்கும் மேற்பட்ட புதுச்சேரி-தமிழக பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் வேலைக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் கூட 3 கி.மீ சுற்றி செல்லும் நிலை ஏற்படும்.எனவே, சுற்றுவட்டார கிராம மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அமைத்து தரவேண்டும், மேம்பாலம் கட்டும் பணியை கைவிட வேண்டும் என்றனர். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏவும், வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் போராட்டக்காரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதுசம்பந்தமாக முதல்வரிடம் பேசுவதாக உறுதியளித்தார். மேலும், வில்லியனூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….
The post வில்லியனூர் அருகே பரபரப்பு மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.